மது குடிக்க பணம் கேட்டு மிரட்டி வாலிபரை கத்தியால் குத்திய பெயிண்டர்!

கோவையில் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டி வாலிபரை கத்தியால் குத்திய பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி(28). இவர் கோவை ராமநாதபுரம் சூரியன் தெருவில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் கோவிந்தசாமி நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கோவிந்தசாமியிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டார். அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசி கோவிந்தசாமியை கத்தியால் குத்தினார். இதில் தலையில் காயமடைந்த கோவிந்தசாமி வலியால் சத்தம் போட்டார். இதனைக்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

கத்தி குத்தில் காயமடைந்த கோவிந்தசாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், கோவிந்த சாமியை கத்தியால் குத்தியது நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த பெயிண்டர் யுவராஜ்(19) என்பது தெரிந்தது. அதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.