குழந்தைகளை ஏற்றி வரும் பள்ளி வாகனங்களை ஒழுங்குபடுத்த தனிக்குழு!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் தொடங்கியுள்ளதை அடுத்து பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்து வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து பள்ளி நிர்வாகத்தினர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த 8ஆம் தேதி வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

அந்த கூட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு வாயில்கள் இருக்க வேண்டும். குழந்தைகளை அழைத்து வரும் வாகனங்கள் ஒரு வாயில் வழியாக உள்ளே சென்று, பள்ளி வளாகத்திற்குள் மட்டுமே குழந்தைகளை இறக்கிவிட்டு, மற்றொரு வாயில் வழியாக வெளியே வர வேண்டும் எனவும், பள்ளியின் நுழைவாயில் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிப்பு செய்து பள்ளிக்கு வரும் வாகனங்களை ஒழுங்குப்படுத் வேண்டும். மேலும், இந்த நடைமுறைகள் செயல்படுத்துவதைக் கண்காணிக்க தினமும் பொறுப்பான நபர்களை நியமிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் சென்ற பெரும்பாலான வாகனங்கள், பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படாமல், சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி குழந்தைகள் இறங்கி பள்ளிக்குள் செல்வதை காணமுடிந்தது. மேலும், ஒலி பெருக்கிகள் நுழைவாயிலின் அருகில் நிறுவப்படவில்லை. பள்ளிக்கு வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கென பள்ளிகளின் சார்பில் யாரையும் நியமிக்கவில்லை. கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பெரும்பாலான பள்ளிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

எனவே, பள்ளி நிர்வாகத்தினர் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கென தினந்தோறும் தனிக்குழுக்களை அமைத்து கண்காணிக்க வேண்டும். பள்ளியில் இரண்டு வாயில்களை பயன்படுத்தி, பள்ளிக்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும், பள்ளிக்கு வரும் வாகனங்களால் பொது போக்குவரத்திற்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாமல் செயல்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், இந்த அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும், என்றனர்.