பெட்ரோல், டீசல் பயன்பாடு நீண்ட காலத்துக்கு போதுமானதாக இருக்காது

– ஐஓசிஎல், தமிழ்நாடு பொதுமேலாளர் ஆதவன்

தமிழ்நாடு அரசின் ஒப்புதலோடு சிஎன்ஜி இயற்கை எரிவாயு நிரப்பும் மையத்தை துவக்கியுள்ள விஜய் ஆயின் அண்ட் கேஸ் நிறுவனத்துடன் இணைந்து, திருமலா மில்க் புராடாக்ட் 18 வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு கருவிகளை பொருத்தியுள்ளது.

முன்பு இந்த வாகனங்கள் அனைத்தும் டீசல் இன்ஜின்களைக் கொண்டிருந்தது. பரிசோதனை திட்டமாக கோவை பெங்களுரு இடையே இயங்கும் காண்டி டிராவல்ஸ், பொள்ளாச்சி, காங்கேயம் இடையே இயங்கும் கேபிடி மொபசல் பஸ் போன்றவற்றை சிஎன்ஜிக்கு விஜய் ஆயில் அன்ட் கேஸ் நிறுவனம் மாற்றியது.

வாகனத்தில் நிரப்பப்பட்டுள்ள எரிபொருள் அளவு குறித்த குறுஞ்செய்தி டிரைவருக்கு அவ்வப்போது கிடைக்கும். அதோடு, ஏதாவது எரிபொருள் வீணாகிறதா என்பது பற்றியும் இதில் இருக்கும்.

இதற்கான துவக்க விழா செங்கப்பள்ளியில் உள்ள ஐஓசிஎல் கோகோ பம்ப்பில் நடந்தது. தலைமை விருந்தினராக திருமலா மில்க் புராடாக்ட்ஸ் விநியோகத் தொடர் இயக்குனர் அருண் செல்வக்குமார் பங்கேற்றார்.

விழாவில் தமிழ்நாடு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பொது மேலாளர் ஆதவன், சில்லறை விற்பனை முதுநிலை மேலாளர் பிரியா பழனி, அதானி குழுமத்தின் முது நிலை துணைத் தலைவர் ராஜேஷ் பிரபு மற்றும் விஜய் கேஸ் சர்வீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் ஐஓசிஎல், தமிழ்நாடு பொதுமேலாளர் ஆதவன் பேசியதாவது: பெட்ரோல், டீசல் பயன்பாடு நீண்ட காலத்துக்கு போதுமானதாக இருக்காது. போக்குவரத்தில் வாகனங்கள் மாற்று எரிபொருளுக்கு விரைவில் மாறுவது என்பது செலவு சிக்கனத்துக்கும், சுற்றுச்சூழல் நலனுக்கும் உகந்ததாக இருக்கும். இந்த வகையில், இந்த வட்டார பஸ் முதலாளிகள் துணிந்து சி.என்.ஜி எரிபொருள் பயன்பாட்டுக்கு முன்வந்தது பாராட்டுக்குரியது.

உக்ரைன் போரினால், புதிய மாற்று எரிபொருள் ஆராய்ச்சியும், பிரயோகமும் தாமதமாகிக் கொண்டிருக்கிறது எனப் பேசினார்.