ஈஷாவின் வழிகாட்டுதலில் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் புது சாதனை

ஈஷாவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் கோவை வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் 2021-2022-ம் நிதியாண்டில் ரூ.17.7 கோடி மொத்த வருவாய் ஈட்டி புது சாதனை படைத்துள்ளது. இது கடந்த நிதியாண்டை விட ரூ.3.7 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனம் சத்குருவின் ஆலோசனையின் படி, கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1063 விவசாய உறுப்பினர்களை கொண்டுள்ள இந்நிறுவனத்தில் 404 பேர் பெண் விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து லாபகரமாக இயங்கி வரும் இந்நிறுவனத்தின் ஆண்டு பொது கூட்டம் கோவை ஈஷா யோகா மையத்தில் புதன்கிழமையன்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான விவசாய உறுப்பினர்கள் பங்கேற்றனர். அவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட தகவலின்படி, வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் உறுப்பினர்கள் மொத்தம் 5,859 ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர்.  இந்நிறுவனம் தேங்காய், தேங்காய் மட்டை, காய்கறிகள், தேங்காய் எண்ணெய், உர கடை என பல்வேறு வழிகளில் வருமானம் ஈட்டி வருகிறது. கடந்தாண்டு இதில் அதிகப்பட்சமாக, தேங்காய் விற்பனையின் மூலம் ரூ.14.92 கோடியும், உர கடையின் மூலம் ரூ.1.26 கோடியும் வருவாய் ஈட்டியுள்ளது.

2022 ஆம் ஆண்டில் 5621 டன் தேங்காய், 7066 டன் தேங்காய் மட்டை, 252 டன் காய்கறிகள், 2.7 டன் தேங்காய் எண்ணெய் ஆகியவை இந்நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் தலைவரும், தொண்டாமுத்தூர் விவசாயியுமான குமார் பொது கூட்டத்தில் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசுகையில், “ஈஷாவின் ஆதரவோடும், விவசாய உறுப்பினர்களின் பங்களிப்போடும் நாம் கூடிய விரைவில் ரூ.50 கோடி ஆண்டு மொத்த வருவாய் என்ற இலக்கை அடைய திட்டமிட்டு வருகிறோம். நம்முடைய விவசாயிகளின் காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்யவும், தேங்காய் மற்றும் காய்கறிகளை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கும் முயற்சிகள் எடுத்து வருகிறோம்.

நாம் தொடர்ந்து நல்ல படியாக விவசாயம் செய்ய வேண்டுமானால், மண் வளம் மிகவும் அவசியம். எனவே, சத்குரு ஆரம்பித்துள்ள ‘மண் காப்போம்’ இயக்கத்தின் பரிந்துரைகளின் படி மாதிரி பண்ணைகளை நம்முடைய கிராமங்களில் உருவாக்க வேண்டும். மண் பரிசோதனை செய்வதை எளிமையாக்கும் வகையில், ‘நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்தை’ உருவாக்கவும் நம்முடைய நிறுவனம் திட்டமிட்டுள்ளது” என்றார்.

இந்த ஆண்டு பொது கூட்டத்தில் இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் வேலுமணி, நாகரத்தினம், கிட்டுசாமி மற்றும் ஈஷா தன்னார்வலர்கள் வெங்கட் ராசா, அருணகிரி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

இந்நிறுவனம் தன்னுடைய சிறப்பான செயல்பாட்டால் மத்திய, மாநில அரசுகளிடமிருந்து பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. குறிப்பாக, ஐதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் ஆராய்ச்சி அகாடமி (ICAR – NAARM) ‘சிறந்த வளர்ந்து வரும் உழவன் உற்பத்தியாளர் நிறுவனம்’ என்ற விருதை கடந்த செப்டம்பர் மாதம் வழங்கி கெளரவித்தது. இதேபோல், 2021 ஆண்டு தமிழக அரசின் ‘சிறந்த எப்.பி.ஓ’ விருது உள்ளிட்ட பல விருதுகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது.