எட்டு வழி சாலை போடப்படுமா? இல்லையா? “முதல்வருடன் பேசி தான் முடிவு எடுக்கப்படும்”

– அமைச்சர் எ.வ.வேலு

கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள கலையரங்கில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆய்வுக் கூட்டத்திற்கு பின் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: கோவையில் 2415 சாலை நெடுஞ்சாலைத்துறை மூலம் பராமரிக்கப்படுகிறது. கிராம சாலைகள் தரம் உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 10 ஆயிரம் கிலோ மீட்டர் தரம் உயர்த்தப்படும்.15 நாளில் பணிகள் தொடங்கப்படும்.

கோவை விபத்து மாவட்டமாக உள்ளது. இதனால் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. 37 பகுதி விபத்து பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 13 இடம் சீர்செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. காலப்போக்கில் விபத்து குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்றைய கூட்டத்தின் கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.

அதிமுக போராட்டம் தொடர்பாக பத்திரிக்கை பார்த்து தெரிந்து கொண்டேன். ஐந்து ஆண்டு ஆட்சி நடத்தியவர்கள் தான் காரணம். நாங்கள் வந்து ஒன்றரை ஆண்டுதான் ஆகிறது. தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள இந்த போராட்டம் இருக்கும்.

கோவையில் இரண்டு பாலங்களின் பணிகள் நடைபெற்று வருகிறது. மார்ச் மாதத்திற்குள் பாலப் பணி முடிந்து விடும்.

எட்டு வழி சாலை திட்டம் கொள்கை முடிவு. சாலை போடப்படுமா இல்லையா என்பதை முதல்வருடன் பேசி தான் முடிவு எடுக்கப்படும். மதுக்கரை முதல் மேட்டுப்பாளையம் வரை புறவழிச்சாலை அமைத்தால் போக்குவரத்து நெரிசல் சரியாகும். நிதி ஒதுக்கப்பட்டுள்ளது டெண்டர் விடப்படும்.

அதிக ஆணைகள் வழங்கிய அரசு திமுக அரசு. கோவையில் வேலை வாய்ப்பை அதிகரிக்க முதல்வர் தொழிற்சாலை உருவாக்கி வருகிறார். காரமடை, மேட்டுப்பாளையம் பைபாஸ் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். இதன் மூலம் நெரிசல் குறைக்கப்படும். சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அறநிலை துறை மூலமும் கால்நடைகள் கோசாலைகளில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.