மனதை சிறப்பாகக் கையாள சில தந்திரங்கள்

சத்குரு: ஈடுபாடு கொள்வது என்றால் நீங்கள் எங்கேயோ சென்று, ஏதோ செயல் செய்யவேண்டும் என்பது பொருளல்ல.  ஈடுபாடு என்பது ஒரு செயல் அல்ல. அது வாழ்க்கையுடன் விருப்பத்துடன் இருக்கும் ஒரு நிலை. வாழ்வின் அத்தனை நிகழ்வுகளிலும் நீங்கள் விருப்பம் கொள்வீர்கள். ஆனால் நீங்கள் எதனுடனாவது அடையாளம் கொண்டால், வாழ்க்கையின் போக்கில் விருப்பம் கொள்ள மாட்டீர்கள். தேர்ந்தெடுத்த சிலவற்றின் மீது மட்டும் விருப்பம் கொண்டு, வாழ்க்கையின் மற்ற அம்சங்களில் விருப்பமற்று இருக்கிறீர்கள். இத்தகைய விருப்பமின்மைதான், ஒரு மனிதருக்குள் இருக்கும் உயிரோட்டத்தைக் குறைத்துவிடுகிறது.

உங்களுடைய உயிரோட்டம் குறைந்துகொண்டே போவது ஏனென்றால், தேர்ந்தெடுத்த சிலவற்றின் மீது அல்லது சிலரின் மீது மட்டும் வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டு, தவணை முறைகளில் நீங்கள் தற்கொலை செய்துகொள்கிறீர்கள். நீங்கள் விருப்பத்துடன் எதைச் செய்தாலும், அது உங்களுக்கு சொர்க்கமாக இருக்கிறது. நீங்கள் விருப்பமின்றிச் செய்யும் எதுவும், உங்களுக்கு நரகம்தான். விருப்பமின்றி செய்யும்போது, மிகவும் அழகானதாகக் கருதப்படுவது, மிகவும் மோசமாகிவிடலாம்.

நீங்கள் விருப்பத்துடன் எதைச் செய்தாலும், அது உங்களுக்கு சொர்க்கமாக இருக்கிறது. நீங்கள் விருப்பமின்றிச் செய்யும் எதுவும், உங்களுக்கு நரகம்தான். விருப்பமின்றி செய்யும்போது, மிகவும் அழகானதாகக் கருதப்படுவது, மிகவும் மோசமாகிவிடலாம்.  

வாழ்க்கை உங்களுக்கு நிகழ, நீங்கள் முழுமையான விருப்பத்துடன் அனுமதிக்கிறீர்களா அல்லது விருப்பமில்லாமல் அனுமதிக்கிறீர்களா என்பதைப் பொறுத்துதான், உங்கள் மனம் என்பது உங்களுக்கு ஒரு அற்புதமாகவோ அல்லது ஒரு துயரக் கூடமாகவோ ஆகிறது. நீங்கள் வாழ்க்கையுடன் காதலில் இருக்கிறீர்களா அல்லது வாழ்க்கை உங்களுக்கு வன்முறையாக இருக்கிறதா? அதுதான் கேள்வி. வாழ்க்கை உங்களிடம் வன்முறை உறவு கொண்டிருந்தால், மனம் ஒரு துயரக்கூடம்தான்.

உங்களுடைய அன்பிற்குரியவரையும், உங்கள் குழந்தையையும் எந்த மாதிரியான தீவிர ஈடுபாட்டுடன் பார்க்கிறீர்களோ, அதே ஈடுபாட்டு உணர்வுடன் இந்த வானத்தையும், மரங்களையும், மண்ணையும் பாருங்கள். உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் நீங்கள் ஒரே விதமான தீவிர உணர்வும், ஈடுபாடும் கொண்டிருந்தால், மனம் ஒரு துயரம் அல்ல. அது ஒரு அழகான சர்க்கஸ். “சர்க்கஸ்” என்பது ஒரு எதிர்மறையான வார்த்தை அல்ல. ஒரு சர்க்கஸ் என்பது மிகப் பெரிய அளவில், ஒத்திசைவோடு ஒருங்கிணைக்கப்பட்ட செயல்களின் தொகுப்பு. அதே விதமாகத்தான் மனித மூளையும் செயல்படுகிறது. ஏற்கனவே திரட்டப்பட்ட செய்திப்பதிவுகளின் தொகுப்பைத்தான் நாம் பொதுவாக மனம் என்று குறிப்பிடுகிறோம்.

தாயின் கருவறைக்குள் இருக்கும் நேரம்தான், ஒரு மனிதனுக்குள் உயர்ந்த விஷயங்களைப் புகட்டக்கூடிய அருமையான காலம் என்பதை நாம் அறிந்திருந்தோம். அதனால்தான் கர்ப்பமான ஒரு பெண் எப்படி இருக்கவேண்டும் என்றும், என்ன மாதிரியான சூழலில் அவள் இருக்கவேண்டும் என்றும், எந்த விதமாக அவள் நடத்தப்பட வேண்டும் என்றும், எந்த விதமாக அவள் நடத்தப்படக் கூடாது என்றும் ஒரு விரிவான கவனிப்பு முறை நடைமுறையில் இருந்தது. குறிப்பிட்ட சில மனிதர்களை சந்திக்கக்கூட அவள் அனுமதிக்கப்படவில்லை. மிகவும் அன்பான மனிதர்களும், அறிவும், புத்திசாலித்தனமும் நிரம்பிய மனிதர்களும் மட்டுமே அவளைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.

அந்தக் கருவைத் தாங்கியிருப்பவளை எந்த விதமான எதிர்மறை உணர்வுகளுக்கோ, எந்த விதமான எதிர்மறை சூழல்களுக்கோ ஆட்படுத்தாமல் பாதுகாப்பாக வைத்திருந்தனர். ஏனெனில் அந்தக் கருவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் குழந்தைக்கு அப்போதுதான் நன்றாக கற்பிக்க முடியும். மிக ஆழமான உறக்க நிலையில் இருக்கும்போது போதிப்பது மிகவும் எளிது. ஒரு மனிதர் விழித்திருக்கும்போது அதிகமான கவனச் சிதறல்கள் இருக்கின்றன. நீங்களே கவனித்திருக்கலாம் – உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்போது பலவழிகளில் நீங்கள் உடலைப்பற்றிய உணர்வில் இருக்கிறீர்கள். உடலை சொறிந்துகொள்வது, சுற்றிலும் பார்வையிடுவது, அப்படியும், இப்படியும் திரும்புவது என்று  இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் உறக்கத்தில் இருக்கும்போது இத்தகைய செயல்கள் எதுவும் நடப்பதில்லை. அப்போது உங்களுடைய கிரகிக்கும் திறன் முழுமையாக உள்ளது.

ஆகவே, உங்களது விழிப்பு நிலையிலோ அல்லது உறக்க நிலையிலோ, நீங்கள் பார்க்கும், கேட்கும், முகரும், சுவைக்கும் மற்றும் தொட்டு உணரும் ஒவ்வொரு விஷயமும் பதிவாகிறது. இந்த அத்தனை செய்திகளும் அங்கு இருக்கின்றன. இந்தச் செய்திகளை எவ்வளவு ஒத்திசைவுடன் உபயோகிக்கிறோம் என்பதுதான் மனதின் திறனாக வெளிப்படுகிறது.

உண்மையிலேயே நீங்கள் மனதைக் கட்டவிழ்க்க விரும்பினால் மனதைக் கட்டுப்படுத்துவது அல்ல, மனம் என்கிற சக்தியை உண்மையிலேயே நீங்கள் வெளிப்படுத்த விரும்பினால், உங்களுடைய அறிவானது எதனுடனும் அடையாளம் கொள்ளாமல் இருக்க வேண்டியது மிகவும் அடிப்படையானது. அப்போது உங்களது புரிதல் முற்றிலுமாகத் தெளிவு பெறுகிறது. அதன் பிறகு, மனம் இயல்பாகவே தன்னை ஒருங்கிணைத்துக் கொள்கிறது. முயற்சியெடுத்து நீங்கள் உங்கள் மனதை ஒருங்கிணைக்க வேண்டியதில்லை. உங்களுடைய புரிதல் தாறுமாறாக இருப்பதால்தான், மனதின் செயல்பாடும் மற்றும் அதன் வெளிப்பாடும் கூட சிதைவுபட்டுள்ளது.