முற்றிய நிலை புற்றுநோயாளிகள் வீட்டிற்கே சென்று இலவச மருத்துவ சேவை

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் அறிமுகம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் கோவையில் உள்ள முற்றிய நிலை புற்றுநோயாளிகள் வீட்டிற்கே சென்று இலவச மருத்துவ சேவைகள் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சிறப்பு மருத்துவ வாகனம் மூலம் சென்று மருத்துவ உதவி வழங்கப்படும்.

இந்த சேவையை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையும், ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையமும், ரோட்டரி கோயம்புத்தூர், மெரிடியன் கிளப் மற்றும் ஆட்டிட்யுட் அறக்கட்டளை உடன் இணைந்து வழங்குகிறது.

இந்த சேவையை எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி, ஆட்டிட்யுட் அறக்கட்டளையின் தலைவர் வெங்கட பிரசன்னகுமார், ரோட்டரி கோயம்புத்தூர் மெரிடியன் கிளப் தலைவர் பெரியசாமி, இந்த திட்டத்தின் தலைவர தாமரைச்செல்வன், புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் மருத்துவர் குகன் மற்றும் அறுவை சிகிச்சை புற்றுநோய் நிபுணர் மருத்துவர் கார்த்திகேயன் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

இந்த சேவை குறித்து மருத்துவர் குகன் கூறுகையில்: ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் முற்றிய நிலை புற்றுநோயாளிகளுக்கு இலவச இறுதி நிலை சேவைகள் வழங்கும் மையத்தை இந்த ஆண்டு துவக்கத்தில் பேரூர் பகுதியில் உள்ள பச்சாபாளையத்தில் துவக்கி வைத்ததை அடுத்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இறுதி நிலையில் இருக்கக்கூடிய நோயாளிகளுக்கு நாங்கள் வழங்கும் மற்றொரு விலைமதிப்பில்லாத சேவை இது.

புற்றுநோயின இறுதி கட்டத்தில் இருக்கும் நோயாளிகளை வீட்டில் வைத்து பார்த்துக் கொள்வதற்கு குடும்ப உறுப்பினர்கள் மருத்துவ ரீதியான சில தகுதிகள் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

பெரிதளவில் இது சாத்தியம் இல்லை என்பதால் இந்த சேவையை நாங்கள் அவர்கள் இல்லத்திற்கே எடுத்து செல்ல எண்ணினோம். அதன் விளைவே இந்த சேவை திட்டம்.

கோவை மாநகரின் 20 கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் இந்த சேவைகளை தேவைப்படுவோர் யார் வேண்டுமானாலும் இதற்கான பிரத்தியேக தொலைபேசி எண்ணை 9842267100 அழைத்து பெற்றுக் கொள்ளலாம்.

முற்றிய நிலை புற்றுநோயாளிகளுக்கு வழங்கும் சேவைகளில் முறையாக பயிற்சி பெற்ற நிபுணர்கள் எங்களுடைய மருத்துவ வாகனத்தில் நோயாளிகளின் இல்லத்திற்கே சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை இலவசமாக வழங்குவார்கள். இந்த சேவைகள் முற்றிலும் இலவசமாக (ஞாயிறு தவிர) அனைத்து வேலை நாட்களிலும் வழங்கப்படும் எனக் கூறினார்.