மூளைச்சாவடைந்த மின்வாரிய ஊழியரால் 7 பேருக்கு மறுவாழ்வு

மூளைச்சாவடைந்த 36 வயது மின்வாரிய ஊழியரால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. இவரது பெயர் விவேக். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகாவில் அவரது மனைவி வினோதினி மற்றும் மகள் ஆராதனா ஸ்ரீ (வயது 3) அவர்களுடன் வசித்து வந்தார்.

இவர் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி மாலை இரண்டு சக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது முத்துமங்கலம் கே.கே.பி மெட்ரிகுலேஷன் பள்ளி அருகில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை, அவிநாசி ரோடு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது மனைவி வினோதினி, தனது கணவர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது இருதயம், சிறுநீரகங்கள், கண்கள், தோல் மற்றும் எலும்பு, ஆகியவை தானமாக பெறப்பட்டது. இருதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம், கண்கள், தோல் மற்றும் எலும்பு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பிவைத்தனர்

இது குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர் உடல் உறுப்பு தானம் வழங்கிய விவேக் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.