குளங்களில் டீசல் படகுகள் செலுத்துவதால் மீன்கள் உயிரிழக்க கூடும் – கோவை மீனவர்கள் வானதி சீனிவாசனிடம் மனு

குளங்களில் டீசல் படகுகள் செலுத்துவதால் மீன்கள் உயிரிழக்க கூடும் என கோவை வட்ட மீனவர்கள் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ விடம் மனு அளித்துள்ளனர்.

அவர்கள் அளித்த மனுவில், இந்த குளங்களை நம்பி 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. தற்போது குளங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம், பெரியகுளம், வாளாங்குளம் ஆகிய இரு குளங்களிலும் டீசல் படகுகள் விடுவதற்காக பணிகள் மேற்கொள்ளப்படுகிறது .

நாங்கள் பெடல் படகுகள் விடுவதாக எண்ணினோம். தற்போது டீசல் படகுகள் விடுவதால் குளத்தில் உள்ள மீன்களில் டீசல் மற்றும் பெட்ரோல் வாசம் வரும். இதனால் குளங்களில் டீசல், பெட்ரோல் படகுகள் விடுவதை தவிர்க்கவும் என குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஏரியில் டீசல் படகுகள் பயன்படுத்தியதால் தான் மீன்கள் டீசல் வாசத்தினால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கும்படி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.விடம் கேட்டுக் கொண்டனர்.

இந்த மனுவை பெற்று கொண்ட மாநகராட்சி ஆணையரிடம் தொலைபேசியில் இந்த திட்டத்தை தவிர்க்குமாறும், இதன் வாயிலாக மீனவர் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.