அமலாக்கத் துறையின் விசாரணைக்காக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜரானார்.
அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு மதியம் 1 மணிக்கு விசாரணைக்காக வந்த அமைச்சர் ஐ.பெரிய சாமியிடம் 3.30 மணி வரை விசாரணை நடத்தினர்.
கடந்த 2006 ம் ஆண்டு தமிழக காவல் துறையின் உளவுத் துறை ஐ.ஜியாக இருந்தவர் ஜாபர் சேட். இவர் அந்த பதவியிலிருந்தபோது, உண்மைகளை மறைத்து வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டை பெற்று, பல கோடி ரூபாய் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது.
அதனைதொடர்ந்து, கடந்த 2011 ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப் பதிவு செய்து சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. 2007-2008 ம் ஆண்டு காலகட்டத்தில் வீட்டு வசதி வாரியத்தில் ஜாபர் சேட்டுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த மாதம் ஜாபர் சேட்டிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்திய நிலையில், தற்போது கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் விசாரணை நடத்தினர்.