கள்ளிக்காட்டு இதிகாசத்தில் நாயகனாக ரஜினி? – வைரமுத்து தகவல்

கவிப்பேரரசு வைரமுத்துவின் 70 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, அவர் திரை உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் விதமாக ‘வைரமுத்து இலக்கியம் 50’ என்ற நிகழ்ச்சி கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள சுகுணா கலையரங்கத்தில் இன்று நடைபெற உள்ளது.

இந்நிலையில் ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் கவிப்பேரரசு வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பத்திரிக்கைகளால் தான் எனது படைப்புகள் வளர்ந்தது என்று சொல்லிக் கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை. 60 ஆம் ஆண்டு பிறந்த நாளும், கோவையில் கொண்டாடப்பட்டதாகவும், அதில் அப்துல் கலாம் கலந்து கொண்டு என்னை வாழ்த்தியது என்றும் மறக்க முடியாது என்றார்.

சினிமா பாடல்களை பொறுத்தவரை கொண்டாட்ட கருவி, கற்பிக்கிற கருவி (இலக்கியம்) என இரண்டு உள்ளது. இலக்கியம் ஒரு பக்கம், கொண்டாட்டம் ஒரு பக்கம் என இருந்த சினிமா தற்பொழுது கொண்டாட்டம் மட்டுமே போதும் என்று குறுகி விட்டதாகவும், அது கலை விபத்து எனவும் சாடினார்.

வெகு விரைவில் இலக்கியம் பாதி, கொண்டாட்டம் பாதி அல்லது இலக்கியமே முழுமை என்ற நிலைமைக்கு சினிமா வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

கை தொலைபேசி வந்த பிறகு, இந்த உலகம் கைபேசிக்கு முன், கைபேசிக்கு பின் என்று மாறிவிட்டது. இந்த மாற்றத்தை நம்மால் தவிர்த்து விட முடியாது. விஞ்ஞானம் என்பது ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நம் தலை மீது சவாரி செய்யும். ஆனால் எந்த அளவிற்கு சவாரி செய்ய விடலாம் என்பதை சமூகம் தான் தீர்மானிக்க முடியும்.

அதேபோல் இலக்கியத்தை தேர்ந்தெடுத்து படிப்பதை மாணவர்களும், ஆசிரியர்களும் உண்டாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அனைத்து பள்ளிகளிலும் வாரத்தில் இரண்டு வகுப்புகள் இலக்கிய வாசிப்பு வகுப்பு என்று ஒன்றை உருவாக்க வேண்டும் என தமிழ்நாட்டு கல்வித்துறைக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழர்கள் பேசுகின்ற பொழுது தமிழில் பேசுங்கள். தமிழர்கள் அவர்களது பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள் என கேட்டுக்கொண்ட அவர், அப்போது தான் பள்ளிக்கூடங்களில் தமிழ் பெயர் உச்சரிக்கப்படும். பங்கீட்டு அட்டை, கடவுச்சீட்டு ஆகிய இடங்களில் தமிழ் பெயர் இடம் பெறும். குறைந்தது நீதிமன்றங்களிலாவது தமிழ் பெயரை உச்சரிக்கின்ற வாய்ப்பு கிட்டும். இதில் அரசியல் பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் குறைவாக இருப்பதாகவும், புவியியல், கணிதம் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழ் பாடம் நடத்துவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருவதற்கு பதிலளித்த அவர், பிற பாட ஆசிரியர்கள் தமிழ் தெரிந்து அதனை கற்றுக் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளலாம். அதேசமயம் தமிழை முறையாக படித்தவர்கள் தான் இலக்கணம் சொல்லித் தர முடியும். அடிப்படை தெரிந்த தமிழாசிரியர்கள் மாணவர்களுக்கு தமிழ் கற்று கொடுத்தால் தான் அடுத்த தலைமுறை வளரும்.

ஆசிரியர்கள் என்பவர்கள் கற்றுக் கொடுப்பவர்கள் மட்டும் அல்ல, கற்பதை நிறுத்தாதவர்கள் என்றுதான் நான் கருதுகிறேன். மேலும் தமிழ் ஆர்வலர்களும், தமிழ் அறிஞர்களும் அரசுத்துறை அதிகாரிகளும் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டால் இதற்கெல்லாம் நிவாரணம் காண முடியும் என நம்புவதாக தெரிவித்தார்.

மிக நல்ல படைப்புடன் விரைவில் தமிழ் மக்களை சந்திப்பேன். கள்ளிக்காட்டு இதிகாசத்தை படமாக்க வேண்டும் என்று பல இயக்குனர்கள் தன்னை கேட்டதாகவும், அப்போது என்னிடம் ஒரு தயக்கம் இருந்தது என தெரிவித்தார்.

நாவல் படமாக்கப்படுகின்ற பொழுது இரண்டு விதமான விளைவுகள் உண்டு. அதாவது, நாவலில் இருப்பதை விட சிறப்பாக எடுத்துக்காட்டுவது ஒன்று, மற்றொன்று நாவலில் இருப்பதை விட குறைவாக மாறிவிடுவது என இரண்டு உண்டு என தெரிவித்தார்.

மேலும் கள்ளிக்காட்டு இதிகாசத்தை படமாக்கும் பொழுது நடிகர் ரஜினிகாந்தை கதாநாயகராக ஆக்கினால் நன்றாக இருக்கும் என நினைத்ததாக தெரிவித்த அவர், ரஜினி இதனை ஏற்று நடித்தால் அவர் நினைத்த ஊதியம் கிடைக்காவிட்டாலும் எதிர்பாராத விருதுகள் கிடைக்கும் என்றார்.