திரௌபதி முர்முவுக்கு சிவசேனா கட்சி ஆதரவு

இந்திய குடியரசு தலைவர் தேர்தல்  வேட்பாளர்  திரௌபதி முர்முவுக்கு சிவசேனா கட்சி ஆதரவு தெரிவிப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில்  குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தரப்போவதாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா களமிறக்கப்பட்டார். இருவரும் தற்போது தங்களுக்கு ஆதரவு திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சிரோமணி அலிகா தளம், தமிழகத்தில் அதிமுக, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்டோர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில்,  தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு சிவசேனா கட்சியும் ஆதரவு தெரிவிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்த சிவசேனா எம்.பிக்கள் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிவசேனா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மகா விகாஸ் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், சிவசேனா கட்சி திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளது அந்த கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.