மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு முகாமில் 66 பேர் தேர்வு

கோவை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் ஆலோசனை வழங்குவதற்கான சிறப்பு முகாம் இன்று   நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதில், மாற்றுத்திறனாளிகளாக 52,245 பேரும்,  மூன்றாம் பாலினத்தவர்களாக 190 பேரும்  பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு  உதவிடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நபருக்கும்  வேலைவாய்ப்பினை ஏற்படுத்துவதன் மூலம் பொருளாதார சமநிலையை ஏற்படுத்த இயலும் என்ற நோக்குடன் இந்த  தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த முகாமில் 18 வயதிலிருந்து 40 வயதிற்குட்பட்டு 8 ,10, 12 ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் முகாமில் கலந்து கொண்டனர். மேலும், கோவையில் உள்ள 7 பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று ஆட்தேர்வு செய்தனர்.

அதுபோன்று, 113 மாற்றுத்திறனாளிகளும், 23 மூன்றாம் பாலினத்தவர்களும் பங்கேற்றனர்.  இவர்களில் 58  மாற்றுத்திறனாளிகள் , 8 மூன்றாம் பாலினத்தவர்கள்  என மொத்தம் 66 நபர்கள்  தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.