கோவையில் சாலைகளை மேம்படுத்த ரூ.169 கோடி நிதி ஒதுக்கீடு

கோவை மாநகரில் பிரதான பிரச்சனையாக இருப்பது முறையான சாலை வசதிகள் இல்லாததே. எங்கு பார்த்தாலும் குண்டும் குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆங்காங்கே விபத்துகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

மாநகரில் உள்ள சாலைகள் சீரமைக்காமல் இருப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்ததே காரணமாக இருந்தது. இந்த நிலையில் மாநகரில் உள்ள 456 சாலைகளை மேம்படுத்த ரூ.169 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் பெறப்பட்ட மக்கள் மன்ற மனுக்களின் அடிப்படையில் இந்த 456 சாலைகள் மேம்பாடு செய்வதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மேலும், இணைப்பு சாலைகளை மேம்படுத்த உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.144 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர சாலை மேம்பாட்டு பணிக்காக தமிழ்நாடு நிலையான நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சேதமடைந்த சாலைகளில் ‘பேட்ச் ஒர்க்’ செய்ய ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்: “சாலைகளின் தற்போதைய நிலையைப் பொறுத்து பல்வேறு கட்டங்களாக இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தற்போது சீரமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள 456 சாலைகள் மிகவும் மோசமான நிலையிலுள்ளன. தவிர மராமத்து வேலை மட்டும் தேவைபடுகின்ற சாலைகளின் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர மேலும் 289 சாலைகள் சீரமைக்கப்படவுள்ளன. இதற்கான பரிந்துரையை கடந்த மே 8ம் தேதி அமைச்சர் கே.என்.நேரு தனது கோவை பயணத்தின் போது செய்துள்ளார்.

கூடுதலாக சாலை இணைப்பிலுள்ள இடைவெளிகளும் சரி செய்யப்படும். இதனால் சாலை போக்குவரத்திலுள்ள இடர்பாடுகளை நீக்கி தடையற்ற போக்குவரத்தை மேம்படுத்த முடியும்.” என்றனர்.