ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் முற்றிய புற்றுநோயாளிகளுக்கு இலவச சிகிச்சை மையம்

முற்றிய புற்றுநோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை, உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இலவசமாக வழங்க ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை முன்வந்துள்ளது.

கோவை பச்சாபாளையம் பகுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஊரக மருத்துவ சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நலிந்த மற்றும் முற்றிய நிலையில் உள்ள புற்று நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கும் வகையில் ‘தி கார்டியன்’ என்ற பெயரில் இலவச முற்றிய புற்றுநோய் சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் மருத்துவர் குகன் திறந்து வைத்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ம் தேதியை உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு புற்றுநோய் தினத்தின் கருத்தாக “கவனிப்பு இடைவெளியை குறைப்போம்” என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாளில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சிகிச்சை மற்றும் அரவணைப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த இலவச மருத்துவ மையம் துவங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு மட்டுமல்லாது, அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புற்றுநோயாளிகளும் இங்கு சிகிச்சை பெறலாம்.

இந்த இலவச மையத்தில் 20 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை, உணவு மற்றும் பராமரிப்பு முற்றுலும் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இங்கு இருக்கலாம்.

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்த முடியும். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிக அவசியமாக உள்ளது என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை டீன் சுகுமாரன், தலைமை செயல் அதிகாரி ராம்குமார், புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைமை கதிரியக்க அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேசு ஆகியோர் கலந்து கொண்டனர்.