மத்திய அரசுக்கு காலி ஊசிகள் அனுப்பி போராட்டம்

தடுப்பூசி தட்டுப்பாட்டை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மத்திய அரசுக்கு காலி ஊசி அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

கோவையில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒருநாள் ஊரகப் பகுதிகளில் ஒருநாள் என்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது சில நாட்கள் இடைவெளிவிட்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததே இதற்கு காரணம் என்று மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்து வருகின்றன.

இந்த சூழலில், கொரோனா தடுப்பூசிகளை போதுமான அளவுக்கு வழங்காமல் தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தபெதிக பொதுசெயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மருந்து இல்லாத காலி ஊசிகளை கையில் வைத்து மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து காலி ஊசிகளை தபால் மூலம் பிரதமர் மோடிக்கு அனுப்பி எதிர்ப்பை தெரிவித்தனர்.