பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து கோவையில் மாட்டு வண்டியில் வந்த காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் நிலையம் முன்பாக, மத்திய அரசுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் கண்டித்து, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க் முன்பும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிவித்திருந்தார்.

அதன்படி கோவையில் காந்திபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் மாட்டு வண்டியில் வந்து தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். தொடர்ந்து பெட்ரோல் பங்க்கில் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி பொதுமக்களிடம், மத்திய அரசுக்கு எதிராகக் கையெழுத்து பெற்றனர்.