கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கென பள்ளி மாணவர்கள் வடிவமைத்த ரோபோ

கொரோனா இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் பலரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் வீட்டில் தனிமை படுத்தப்பட்டு உள்ளனர். வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் அவர்களுக்கென தனி அறை இருக்கவேண்டும் தனி கழிவறை இருக்க வேண்டும் அவர்களுக்கு உணவு அளிக்கும் பொழுது அவர்களை தொட வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் அவர்களுக்கு உணவு அளிப்பது தண்ணீர் வழங்குவது போன்ற செயல்களை செய்வதற்காக கோவை காரமடை பகுதியில் இயங்கி வரும் முக்கூடல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிரஞ்சன், செயலாளர் மணிகண்டன், பள்ளி மாணவர்கள் விஷ்வத், அத்துல் கிருஷ்ணா, நித்தின் ஆகியோர் இணைந்து இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர்.

செல்போன் செயலி மூலமும் இல்லையெனில் அதில் உள்ள சென்சார்கள் மூலமும் தானாகவே இயங்கும் வண்ணம் இதனை வடிவமைத்துள்ளார். இதன் மூலம் உணவு, நீர், மருந்து பொருட்கள் ஆகியவற்றை எடுத்து செல்ல முடியும். அதுமட்டுமின்றி இதில் தானியங்கி கிருமி நாசினி கிடைக்கபெறும் வகையிலும், தரையை சுத்தம் செய்யும் வகையிலும் இதனை வடிவமைத்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அந்நிறுவன முதன்மை செயல் அதிகாரி நிரஞ்சன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமை படுத்தி கொண்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இதனை 5 பேர் இணைந்து ஒரு மாத காலத்தில் வடிவமைதுள்ளோம் என்று தெரிவித்தார். இதன் மூலம் வருங்கால இளைஞர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தின் மேல் ஆர்வம் வரும் என்றும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய மணிகண்டன் இதனை மேலும் புதுபிக்கும் போது மருத்துவமனைகளிலும் பயன்படுத்தலாம். ஆக்சிஜன் சப்ளையையும் கொண்டு சென்று சேர்க்கும் வண்ணம் செய்ய முடியும், மருத்துவர்களே கண்காணிக்கும் வண்ணமும் இதனை வடிவமைக்க செய்யலாம் என்றும் தெரிவித்தார். எங்களின் அடுத்தக்கட்ட முயற்சி அதுதான் என்று கூறினார்.