வெகு சீக்கிரம் முதலமைச்சர் கொரோனா பிடியிலிருந்து தமிழகத்தை மீட்பார் ஈ.ஆர்.ஈஸ்வரன் நம்பிக்கை

கோவை விமான நிலையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் தமிழக மக்கள் அதிக எதிர்பார்ப்புகளோடு, ஆட்சி மாற்றத்தை கொடுத்து சிறப்பான ஆட்சியை அமர்த்தி உள்ளனர். பதவியேற்ற முதல்வர் ஸ்டாலின் தனது அதிகாரிகளை தேர்வு செய்ததில் இருந்தே அவர் எப்படி ஆட்சி நடத்த போகிறார் என்று தெரிந்திருக்கும், தலைமை செயலாளர், முதல்வரின் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த அணியை பார்க்கும் போது தமிழகத்தில் நிர்வாகம் மிக சிறப்பாக நடக்கும் என்பது தெரிந்திருக்கும். முதல் நாளிலேயே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கோப்புகளில் கையெழுத்திட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும் தீவிரமாக செயல்பட்ட துவங்கியுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே அதிகாரிகளை அழைத்து பேசி பணிகளை தீவிரபடுத்தி உள்ளார் என்பதும் அனைவருக்கும் தெரியும், வெகு சீக்கிரம் கொரோனா பிடியிலிருந்து தமிழகத்தை மீட்பார் என்ற நம்பிக்கை உள்ளது. எதிர்பார்த்தது போல தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி, வேலை வாய்ப்புகளை உருவாக்கி, பணப்புழக்கத்தை அதிகரிக்கும் திட்டத்தோடு களத்தில் இறங்கியுள்ளார். தமிழக முதல்வருக்கும், அமைச்சர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். நல்ல அமைச்சர்களை தேர்வு செய்தது மட்டுமல்ல சமூக நீதியை முதல்வர் கவனத்தில் கொண்டுள்ளார் என்பது அந்த பட்டியலை பார்த்தாலே தெரிகிறது. என்று கூறினார்.

மேலும், ஆந்திரா செல்லும் 60 டன் ஆக்ஸிஜனை நிறுத்தி தமிழகத்தில் வழங்க மத்திய அரசு உத்தரவிடவேண்டும். மத்திய அரசின் கட்டாயத்தின் பேரில் முன்னால் இருந்த அரசு ஆந்திராவிற்கு அனுப்பினர், அந்த உத்தரவு மத்திய அரசு நிறுத்த வேண்டும். அதே போல் கேரளாவில் இருந்து ஆக்ஸிஜன் பெற வேண்டும். அதிமுக கட்சியில் எதிர் கட்சி தலைவர் தேர்வு செய்வதில் குழப்பம் வரும் என்பது எதிர்பார்த்தது தான், அதிமுக தேர்தலில் தோற்கும் போது இந்த பிரச்சனை வரும் என அனைவருக்கு தெரியும் அது தான் நடந்துள்ளது. சுமுக தீர்வு காணமல் இப்போது தள்ளிப்போட்டுள்ளனர். அதிமுக எதிர்கட்சியாக இருந்ததாலும் தமிழகத்தில் எதிர் கட்சி வலுவாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம், எனவே சுமுக தீர்வை எட்ட வேண்டும். இந்த பிரச்சனைகள் தேர்தலுக்கு முன்பே இருந்தது தான், தேர்தல் நேரத்தில் ஏதோ ஒட்டிக்கொண்டு இருந்தார்கள், இப்போது பிரச்சனை ஆரம்பித்துள்ளது, இதற்கான முடிவை தீவிரமாக எடுக்கவில்லை என்றால் அதிமுக எதிர்கட்சி வாய்ப்பை இழக்க வேண்டி வரும் என தெரிவித்தார்.