கோவை அரசு மருத்துவமனையில் ரூ.110 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு

கோவை அரசு மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு கட்ட ரூ.110 கோடியில் புதிய கட்டுமான பணிக்கான பூமி பூஜையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திங்கள்கிழமை காணொலி காட்சி  வாயிலாக தொடங்கி வைத்தார்.

கோவை அரசு மருத்துவமனை கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு  வந்து செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்த மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜைக்கா) நிதியுதவி அளிக்க முன் வந்தது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பழைய அவசர சிகிச்சை பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் இயங்கி வந்த பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்தன. அதன் தொடர்ச்சியாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு கட்டுமான பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

இதுகுறித்து டீன் காளிதாஸ் கூறும்போது, கோவை அரசு மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு கட்டுமான பணிகளுக்கு ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இது 7 மாடி கட்டிடங்களை கொண்டது. இங்கு அவசர சிகிச்சை பிரிவு, அதி நவீன அறுவை சிகிச்சை அரங்கு உள்பட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்பட உள்ளன. என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.