இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு

கோவை மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர், அவரின் மகன் உள்பட மொத்தம் 484 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில், தி.மு.க முக்கிய பிரமுகர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் தி.மு.க உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரான கண்ணப்பன்(83) மற்றும் அவரின் மகன் மற்றும் திமுக மாநில செயற்குழு உறுப்பினர் மு.க.முத்து, கோவை தி.மு.க தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர, கோவை அரசு மருத்துவமனை புகைப்பட கலைஞர் ஒருவர், 37 வயது பெண் மருத்துவ ஊழியர், உடையாம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த இருவர், பொள்ளாச்சியை சேர்ந்த 15 பேர், பீளமேடு, கணபதி, ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த மொத்தம் 484 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 954-ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில், 9,442 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 3,250 பேர் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மேலும் இன்று கொரோனாவால் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த 51 வயது ஆண், 49 வயது ஆண், 74 வயது முதியவர், 69 வயது ஆண், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த 70 வயது மூதாட்டி, 52 வயது ஆண், 58 வயது ஆண், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த 78 வயது முதியவர், 62 வயது ஆண், 63 வயது ஆண் என மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 262-ஆக உயர்ந்துள்ளது.