செயற்கை நீர் வீழ்ச்சி, மலை, யோகா பயிற்சி மையம், கண்கவர் ஓவியங்கள் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் வெளிநாட்டு பூங்காவை போல அட்டகாசமாக காட்சி அளிக்கும் கோவை காந்தி பூங்காவை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சி தலைவர் ராசாமணி, காவல் ஆணையர் சுமித் சரண், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத், துணை மாநகராட்சி ஆணையாளர் பிரசன்னா ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.காந்தி பூங்கா, கோவை மாநகரில் வசிக்கும் மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக விளங்கி வருகிறது. 1 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தப் பூங்காவில் இதுவரை காலை, மாலை நேரங்களில் குவியும் மக்கள், தங்கள் குழந்தைகளை விளையாட வைத்தும், நடைப் பயிற்சி மேற்கொண்டும் வந்தனர்.
இந்நிலையில், பூங்காவில் புல் தரை, விளையாட்டு கருவிகள், தளம் ஆகியவை சேதமடைந்ததால் கடந்த சில மாதங்களாக சீரமைப்புப் பணிகள் நடைப்பெற்று வந்தது. 3.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செய்யப்பட்ட இப்பணிகள் நிறைவு பெற்ற இதனை தமிழக உள்ளாட்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார். தற்போது வெளிநாட்டு பூங்காக்களை போல காட்சி தரும் இந்த பூங்காவில், மக்களைக் கவரும் விதமாக செயற்கை நீரூற்று, மலை, நுழைவாயில் இருந்து தொடங்கி பூங்கா முழுவதும் புல்தரை, நடைப் பயிற்சித் தளம் , மக்கள் இளைப்பாற குடில், நீரூற்றுக்கு இடையே நடைப்பாலம், யோகா பயிற்சி மையம்,சிறுவர்களைக் கவரும் விதமாக தூரி, சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் மேலும், பூந்தோட்டம், அலங்கார வளைவுகள், சுவரோவியங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு புதுபொலிவுடன் காட்சி அளிக்கிறது.