உடல்நிலை முன்னேற்றத்துடன்  டிஸ்சார்ஜ் ஆனார் சத்குரு!

டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சில வாரங்களாக கடும் தலைவலிக்கு உள்ளான சத்குருவிற்கு மார்ச் 17-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மிகவும் ஆபத்தான அறுவை சிகிச்சைக்குப் பிறகு சத்குரு  மருத்துவர்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக உடல்நலனில் முன்னேற்றம் கண்டார். சுமார்  10 நாட்கள் மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

முன்னதாக, அப்போலோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் சங்கீதா ரெட்டி சத்குருவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில் “சத்குரு  உடல் நலம் தேறி வருவது குறித்து மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அவர் குணமடையும் அதே வேளையில் அவருடைய உற்சாகத்தை அப்படியே தக்கவைத்துக் கொண்டுள்ளார். உலகளாவிய நன்மைக்கான அவரது அர்ப்பணிப்பு, புத்தி கூர்மை மற்றும் அவரின் நகைச்சுவை உணர்வு அனைத்தும் அப்படியே சிறப்பாக உள்ளது. அவருடைய உடல்நலம் குறித்து விசாரிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இது ஒரு நற்செய்தியாக இருக்கும் என நினைக்கிறேன்” என்றார்.

சத்குருவிற்குச்  சிகிச்சை அளித்த டாக்டர் வினித் சூரி, டாக்டர் பிரணவ் குமார், டாக்டர் சுதீர் த்யாகி, டாக்டர் எஸ். சாட்டர்ஜீ மற்றும் அப்போலோ மருத்துவமனையின் ஒட்டு மொத்த குழுவிற்கும் ஈஷா அறக்கட்டளை மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.