கங்கா மருத்துவமனை சார்பில் நிணநீர் அழற்சி கண்காட்சி

நிணநீர் அழற்சி விழிப்புணர்வை அதிகரிக்க கோவை கங்கா மருத்துவமனை சார்பில் நிணநீர் அழற்சி கண்காட்சி நடைபெற்றது. இதனை மருத்துவமனை நிர்வாக இயக்குநர் கனகவல்லி சண்முகநாதன் துவக்கி வைத்தார்.

லிம்பேடிமா என்பது ஒரு பொதுவான நிலையாகும். இது உடலில் நிணநீர் ஓட்டம் தடைப்படுவதால் கைகால்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. நிணநீர் என்பது புரதம் மற்றும் வெள்ளை ரத்த அணுக்கள் கொண்ட ரத்த நாளங்களிலிருந்து எழும் ஒருவித திரவமாகும்.

புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை, பைலேரியாசிஸ் என்னும் கொசு கடியால் ஏற்படும் நோய், உடலில் ஏற்படும் அதிர்ச்சி மற்றும் சில சமயங்களில் நிணநீர் பாதைகளில் மிகக் குறைவான ஓட்டம் உள்ளிட்ட பிறவிப் பிரச்சினைகள் போன்றவற்றின் காரணமாக இந்த நிணநீர் மண்டலங்கள் பாதிக்கப்படுகின்றன.

நிணநீர் பிரச்சினை காரணமாக மூட்டுகளில் வீக்கம் அதிகரிக்கும் போது, நோயாளிகள் தங்கள் கை மற்றும் கால் விரல்களை அசைப்பது மற்றும் கால்களை நகர்த்துவது மிகவும் கடினமாக இருக்கும். இது நோயாளிகளின் உடல் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துவதோடு, அவர்களை எந்தவித பணியும் செய்யவிடாமல் தடுக்கிறது. இந்த தொற்றானது மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது. இந்த நோய்

காரணமாக ரத்த சோகை ஏற்பட்டு பலர் இறக்கவும் நேரிடுகிறது. இந்நிலையில் நோயாளிகள் தகுந்த நேரத்தில் முறையான சிகிச்சையை எடுக்கும்போது, நிணநீர் அழற்சியை நிச்சயமாகக் கட்டுப்படுத்தலாம் மற்றும் அவர்கள் மிகச் சிறந்த வாழ்க்கையைப் பெறலாம்.

நிணநீர் பிரச்சினை காரணமாக உடலில் வீக்கம் ஏற்படத் தொடங்கும் போது, பிசியோதெரபி மற்றும் அறுவை சிகிச்சை அல்லாத சில சிகிச்சையை வழங்குவதன் மூலம் வீக்கம் அதிகரிப்பதை தடுக்க முடியும். இந்த நிலையில் கட்டி அதிகரிக்கத் தொடங்கும்போது அதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும். நிணநீர் பற்றிய விழிப்புணர்வு என்பது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் நிணநீர் அழற்சிக்கு முறையான சிகிச்சை அளிக்கும்போது அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும், மேலும் அது மோசமடைவதை தடுக்க முடியும் என்பதைப் பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு விழிப்புணர்வு மிகவும் அவசியம் ஆகும். இதனால்தான் மார்ச் 4 முதல் 10 வரை நிணநீர் அழற்சி விழிப்புணர்வு வாரமும், மார்ச் மாதம் நிணநீர் அழற்சி விழிப்புணர்வு மாதமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதை உணர்ந்து கங்கா மருத்துவமனை, நிணநீர் பற்றிய விழிப்புணர்வை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்ல வகையில் விழிப்புணர்வை அதிகரிக்க கண்காட்சியை நடத்தியது. இந்த கண்காட்சியை மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் கனகவல்லி சண்முகநாதன் தமிழ்நாடு அரசின் தேசிய சுகாதார இயக்கத்தின் மாநில திட்ட அலுவலர் மருதுதுரை முன்னிலையில் துவக்கி வைத்தார்.

கண்காட்சியில் கங்கா மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் ராஜசபாபதி, இந்திய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க தலைவர் டாக்டர் ஹரி வெங்கட்ரமணி ஆகியோர் நிணநீர் அழற்சியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினர்.