மத்திய பட்ஜெட்டில் நிதி நிலையில் கவனம்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட், நிதி நிலையில் கவனம் செலுத்தும் அதே வேளையில் வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை அளிக்கிறது என்று தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளன தலைவர் அருண் அழகப்பன் பாராட்டி உள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:- எங்கள் சம்மேளனம் சார்பாக நாங்கள் இந்த பட்ஜெட்டை வரவேற்கிறோம். உள்கட்டமைப்பு, நீலப் பொருளாதாரம், விவசாயம் மற்றும் விண்வெளி, பாதுகாப்பு மற்றும் பசுமை எரிசக்தி துறைகளில் வளர்ச்சியை விரைவுபடுத்த தேவையான அனைத்து அம்சங்களும் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. விவசாயத்தின் மீது மத்திய அரசு கொண்டுள்ள அர்ப்பணிப்பு உணர்வை பிரதிபலிக்கும் இந்த பட்ஜெட்டை நாங்கள் மனதார பாராட்டுகிறோம். அறுவடைக்குப் பிந்தைய காலத்தில் ஒருங்கிணைப்பு, நவீன சேமிப்பு, வினியோகச் சங்கிலிகள், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை செயலாக்கம், சந்தைப்படுத்தல் மற்றும் பிராண்டிங் உள்ளிட்ட செயல்பாடுகளில் தனியார் மற்றும் பொது முதலீட்டை ஊக்குவிக்குவிப்பதில் இந்த பட்ஜெட் வலியுறுத்துகிறது. மேலும், நானோ-டிஏபி போன்ற விவசாயத்தில் புதுயுக தொழில்நுட்ப தயாரிப்புகளை ஊக்குவிக்கும் முயற்சிகள், உர மானிய விலைகளை குறைப்பதிலும் விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும்.

நாட்டில் புதுமைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து, தனியார் துறையில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பதற்காக பட்ஜெட்டில் முன்மொழியப்பட்ட முன்முயற்சிகள் வரவேற்கத்தக்கது. பருவ நிலையை மேம்படுத்துவதற்கான நீலப் பொருளாதாரம் 2.0, அதன் மறுசீரமைப்பு மற்றும் அதை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான திட்டம் மற்றும் கடலோர மீன்வளர்ப்பு மற்றும் கடல்சார் வளர்ப்பில் ஒருங்கிணைந்த அணுகுமுறை மற்றும் 5 ஒருங்கிணைந்த அக்வா பூங்காக்களை அமைக்கும் திட்டம் ஆகியவற்றை எங்கள் சம்மேளனம் முழு மனதுடன் வரவேற்கிறது.

இந்த பூங்காக்களில் குறைந்தபட்சம் 2 பூங்காக்களை இந்தியாவிலேயே 2வது நீளமான கடற்கரை என்ற பெருமையைப் பெற்ற தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்று தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் கேட்டுக் கொள்கிறது என்று தெரிவித்தார். மேலும் அருண் அழகப்பன் கூறுகையில், பிரதமர் கதி சக்தி திட்டத்தின் கீழ், உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு, மல்டி-மாடல் இணைப்பைச் செயல்படுத்துவதற்குத் தேவையான முன்னுரிமைகள் சரியாகப் பெறப்பட்டுள்ளன. மல்டி மாடல் தளவாட போக்குவரத்தில் கவனம் செலுத்துவது என்பது காலத்தின் தேவையாகும், ஏனெனில் இது இந்தத் துறையின் செயல்திறனை மேம்படுத்துவதோடு செலவைக் குறைக்கும். மேலும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமீன் திட்டமானது ஏழை மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீட்டுத் தேவை திட்டத்தை விரிவுபடுத்த உதவும்.

வீட்டு மாடிகளில் சூரிய ஒளி மின்சார பேனல்களை நிறுவும் வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் என்னும் திட்டமானது, இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மாற்றத்தை பெரிதும் ஊக்குவிக்கும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பலன்கள் அனைத்து ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் நீட்டிக்கப்படுவதையும், பாதுகாப்பு செலவினங்களின் அதிகரிப்பு மற்றும் பெண் தொழில்முனை வோருக்கான 34 கோடி முத்ரா யோஜனா கடன்களையும் வரவேற்கிறோம். இந்த முன்முயற்சிகள் பொருளாதாரத்தில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எங்கள் சம்மேளனம் உறுதியாக உள்ளது. மொத்தத்தில், இந்த பட்ஜெட், சூரிய சக்தித் துறை மற்றும் சமூக தாக்கத்தை மையமாகக் கொண்டு வளர்ச்சி சார்ந்த பட்ஜெட்டாக உள்ளது, இதன் மூலம் வணிகம் மற்றும் பொருளாதார நிலை உயரும் என்றும் அவர் தெரிவித்தார்.