வீட்டின் முன்பு தண்ணீர் குடித்து செல்லும் காட்டுயானைகள்

வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த வாழைத்தார் மற்றும் உணவுப் பொருட்கள் சாப்பிட்டு விட்டு தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை மாவட்டத்தில் தடாகம், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து தென்பட்டு வருகிறது. வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி செல்வது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் தடாகம் அருகே வரப்பாளையம் பிரிவு அருகே ஸ்ரீராம் என்பவரது தோட்டத்திற்குள் நேற்று இரவு புகுந்த இரண்டு காட்டு யானைகள் தோட்டத்து வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த வாழைத்தார் மற்றும் உணவுப் பொருட்களை சாப்பிட்டுள்ளன. பின்னர் அருகில் உள்ள தொட்டியில் தண்ணீர் குடித்துவிட்டு வாழை தோட்டத்திற்குள் புகுந்து வாழை பயிரை சாப்பிட்டதுடன் சேதப்படுத்தி சென்றுள்ளன. இதில் ஏராளமான வாழைகள் சேதமடைந்துள்ளது. இவை அனைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

காட்டுயானைகள் தினமும் அப்பகுதியில் சுற்றி திரிந்து விளைநிலங்களை சேதப்படுத்தி செல்வதால் வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்களும் விவசாயிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.