ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு

துடியலூர் வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2004 – 2008 கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் வீணா, செயலாளர் செந்தில்கண்ணன், பொருளாளர் பெருமாள் மற்றும் கிருஷ்ணா குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

2004 – 2008 கல்வியாண்டில் இக்கல்லூரியில் பயின்று, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் முன்னணி நிறுவனங்களில் பணி புரிந்து வந்திருந்த சுமார் நூறு பேர் தங்களின் குடும்பத்தினர்களுடன் கலந்து கொண்டு நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் பலர் தங்கள் கல்லூரி அனுபவங்கள் மற்றும் இப்போது கல்லூரி அடைந்திருக்கும் வளர்ச்சி ஆகியவற்றை சுட்டி காட்டினர்.

கல்லூரி மாணவர்களுக்கு கல்வித்தொகை வழங்குவதற்க்கும், கல்லூரி வளர்ச்சிக்கும் ரூபாய் மூன்றரை லட்சத்துக்கான காசோலையை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தரிடம் முன்னாள் மாணவர்கள் வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து விழாவின் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.

முன்னாள் மாணவர்களில் சிறந்த தொழில்முனைவோராக விளங்குவோருக்கும், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.