மருதமலை மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி

கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் பக்தர்கள் வாகனங்களில் செல்வதற்கு செவ்வாய்க்கிழமை முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.

முருகனின் ஏழாம் படை வீடு என அழைக்கப்படும் மருதமலை மலைக்கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்வதற்கு இரண்டு பாதைகள் உள்ளது. ஒன்று வாகனங்களில் செல்லும் சாலைப்பாதை மற்றொன்று படிக்கட்டுகள் உள்ள பாதை. சாலை வழி மலைப்பாதையில் பக்தர்களின் இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள், மற்றும் கோயில் நிர்வாகத்தின் பேருந்தும் இயக்கப்படும். இந்நிலையில் கோயிலுக்கு செல்லும் சாலை வழிப்பாதையில் சாலை புனரமைக்கும் பணி ஒரு மாத காலமாக நடைபெற்று வந்ததால் அவ்வழி மூடப்பட்டு படிக்கட்டுகள் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் பணிகள் முடிந்ததையடுத்து செவ்வாய்க்கிழமை முதல் சாலை வழிப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கந்த சஷ்டி நிகழ்விற்காக ஏராளமான பக்தர்கள் கங்கணம் கட்டும் நிலையில் சாலை வழிபாதை திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.