ஸ்ரீ ராமகிருஷ்ணா கலைக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா

கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி, “ஆசிரியர் தின விழா மற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவிற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார். அதனைத் தொடர்ந்து, கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் ஆசிரியர் தின விழா குறித்து உரையாற்றினார்.

இதில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவரும், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். குழுமங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலருமான ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

இதன்படி கடந்த ஓராண்டுக் காலமாகச் சிறப்பாகக் கல்விப்பணியாற்றியதில் முதலிடம் பிடித்த மேலாண்மைத்துறை இயக்குநர் பாமினி, இரண்டாமிடம் பிடித்த கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் பிரணீஷ், மூன்றாமிடம் பிடித்த பி.சி.ஏ. துறைத்தலைவர் ஹரி பிரசாத் ஆகியோர் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகளைப் பெற்றனர்.

மேலும், கற்றல், கற்பித்தலில் சிறந்து விளங்கும் துறைகளுக்கான விருதுகளை மேலாண்மைத்துறை முதலிடமும், கணினி அறிவியல் துறை இரண்டாமிடமும் மற்றும் பன்னாட்டு வணிகத்துறை மூன்றாமிடத்தைப்  பெற்றுக் கொண்டன.

அதைத்தொடர்ந்து ஆசிரியர் தினத்தையொட்டி, ஆசிரியர்களுக்கு இடையே நடத்தப்பட்ட பட்டிமன்றம், பாட்டு, சமையல், விளையாட்டு உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டு, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் கல்லூரி இயக்குநர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.