ஸ்காலர்ஷிப் பெற்றுத் தருவதாக கூறி மாணவர்களிடம் மோசடி!

கோவையில் மாணவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு ஸ்காலர்ஷிப் பெற்று தருவதாக ரூ. 7 லட்சம் நூதன மோசடி செய்த நாமக்கல்லை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது, கோவையில் ஸ்காலர்ஷிப் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி நடைபெறுவதாக சைபர் கிரைம் போலீசில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.  மோசடி கும்பல் 10ம் மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுடைய விவரங்களை ஆன்லைன் தளம் மூலமாக சேகரித்துள்ளனர்.

பின்னர் அவர்களை செல்போன் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது உங்களது மகன், மகளுக்கு அரசு மூலமாக ஸ்காலர்ஷிப் பணம் கிடைத்துள்ளது என அரசு அலுவலர்கள் போல் பேசி உள்ளனர். மேலும் அந்த கும்பல் வாட்ஸ் அப் ப்ரோபைலில் தமிழ்நாடு அரசின் லோகோவை வைத்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் வாட்ஸ் அப்பில் கியூ.ஆர்.கோடு அனுப்பி உங்களுக்கு ஸ்காலர்ஷிப் பணம் அனுப்பி வைக்கப்பட்டதாக போட்டோ எடுத்து அனுப்பி உள்ளனர்.

இதனை உண்மை என நம்பி ஸ்காலர்ஷிப் பணம் பெறுவதற்காக கியூஆர் கோடை அழுத்தியவுடன் அவர்கள் வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணமும் மர்ம நபர்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது. இதே போல் கோவையில் ஏழு பேரிடம் ரூ.7 லட்சத்திற்கும் மேல் பண மோசடி நடைபெற்றுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் மாநகர சைபர் க்ரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், இதேபோல் தமிழகம  முழுவதும் 500க்கும் மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. மேற்கொண்டு நடத்தப்படும் விசாரணையில், அவர்கள் எவ்வளவு லட்சம் மோசடி செய்துள்ளனர் என்பது தெரியவரும். அதனைத்தொடர்ந்து, மோசடி ஆசாமிகள் பேசிய செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தபோது அவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

பின்னர், போலீசார் வெள்ளிக்கிழமை 5 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 44 செல்போன்கள், ஏழு வங்கி புத்தகம், 28 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏழை மக்களை குறிவைத்து இந்த மோசடி நடைபெற்றுள்ளது. இதேபோல் லாட்டரி மோசடி, ரிவார்டு பெற்று தருவதாக மோசடி, செல்போன் டவர் அமைக்க பணம் தருவதாக மோசடி என பல்வேறு ரூபங்களில் மோசடி நடைபெற்று வருகிறது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு தாங்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை ஏமாற வேண்டாம், என்றார்.