கோவையில் ஆன்ட்ரியாவின் இசைக்கச்சேரி ! எங்கே எப்போது..?

பிரபல நடிகையும், பாடகியுமான ஆன்ட்ரியாவின் இசைக்கச்சேரி கோவையில் வரும் ஜூலை மாதம் 1ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

தமிழ் திரை உலகில் முன்னணி பாடகியாகவும்,  நடிகையாகவும் வலம் வருபவர் ஆன்ட்ரியா. தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியிருந்தாலும், ஆயிரத்தில் ஒருவன், தரமணி, பச்சைக்கிளி முத்துச்சரம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

இந்த சூழலில் கோவையில் ரெட்நூல்  நிறுவனத்தின் சார்பில் ஹிந்துஸ்தான் கலைக்கல்லூரியில் ஆன்ட்ரியாவின் இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆன்ட்ரியா  கூறியதாவது:

கோலாலம்பூரில் கடைசியாக இசைக்கச்சேரி நடத்தப்பட்டது. அக்கச்சேரி நன்றாக  நடைபெற்றது. தொடர்ந்து கோவையிலும் இசைக்கச்சேரி 2 மணி நேரம் நடைபெறவுள்ளது. இளையராஜா பாடல்களும்,  நான் பாடிய பாடல்களும் இந்த கச்சேரியில் இடம் பெரும்.

கோவை எனக்கு மிகவும் பிடித்த ஊர். கோவையில் நல்ல ரசிகர்களை எதிர்பார்த்து இந்த கச்சேரியை நடத்துகிறோம்.  நடிப்பு, பாடல் எதுவுமே சுலபம் கிடையாது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நான் பாடல் வகுப்புகளுக்குச் சென்றதால் தற்போது சுலபமாக பாடுகிறேன்.

மேலும், நான் இங்கு பாடல் பாடத்தான் வருகிறேன். அரசியலுக்கு வரவில்லை. பெண்களை திட்டுவது போன்ற பாடல்களை நான் கேட்கமாட்டேன். மற்றவர்கள் இது போன்ற பாடல்கள் பாடினால் நான் அதுகுறித்து யோசிப்பதே இல்லை. நான் அப்படிப்பட்டவள் இல்லை” என்றார்.

இந்த இசைக்கச்சேரிக்கு ரூ.250, 500, 1000 மற்றும் ரூ.1500 என்று டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகள், புக் மை ஷோ மற்றும் பேடிஎம்-இல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.