தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் பயணம்

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையிலிருந்து நேற்று சிங்கப்பூர் சென்றடைந்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றுள்ளார்.

சிங்கப்பூர் விமான நிலையத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் சிங்கப்பூர் தொழில் அதிபர்கள், பல்வேறு தமிழ் அமைப்பினர், சிங்கப்பூர் வாழ் தமிழர்கள், அரசு உயர் அதிகாரிகள் மலர் கொத்து, புத்தகங்கள், பொன்னாடைகள் வழங்கி வரவேற்றனர். சிங்கப்பூர் சென்றடைந்த மு.க.ஸ்டாலின் புதன்கிழமை காலையில் சிங்கப்பூர் தொழில் அதிபர்களையும், முன்னணி தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளையும் சென்று சந்தித்து பேசினார்.

அப்போது தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டுக்கான வாய்ப்புகளை எடுத்துரைத்து முதலீடு செய்யும்படி அழைப்பு விடுத்தார். மாலையில் சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது உலகத் தரத்திலான திறமைகள், போதுமான உள்கட்டமைப்பு, ஸ்திரமான கொள்கை ஆகியவற்றுடன் விருப்பமான முதலீட்டு தளமாக தமிழ்நாடு திகழ்வதாக கூறியதுடன், தமிழகத்தில் முதலீடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

இதற்காக, அடுத்த ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 தேதிகளில் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்த மாநாட்டில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டன. இந்த மாநாட்டின்போது தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்), பேம் டிஎன், டான்சிம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவை சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த நிறுவனங்களுடன் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்தன.