புதிய வகை கொரோனா: தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஆலோசனை

மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது. சீனாவில் பரவி வரும் பிஎஃப் 7 மற்றும் பிஎஃப் 12 என்ற ஒமைக்ரான் திரிபு வகை கரோனா குஜராத் மற்றும் ஒடிஸா மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நேற்று முக்கிய ஆலோசனை நடத்திய பின்னர், முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது உள்ளிட்ட தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மாநில அரசுக்கு அறியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து இன்று பிற்பகலில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்திற்கு பிறகு மாநில அரசுகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.