பாதாள சாக்கடை அடைப்பை சீர்செய்ய கூடுதல் ரோபோக்கள்

– கோவை மாநகராட்சி திட்டம்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்யும் பணியில் தற்போது சுமார் 6 ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனிடையே கூடுதலாக தேவைக்கு ஏற்ப ரோபோக்களை வாங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 600 கிமீ தூரத்துக்கு மேல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யவும், மனிதக் கழிவுகளை அகற்றவும் தனியார் நிறுவனத்தினரால் ரோபோ இயந்திரம் தயாரிக்கப்பட்டன. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.36 லட்சம் மதிப்புள்ள முதல் ரோபோ இயந்திரம் தனியார் நிறுவனத்தினரால் கொள்முதல் செய்யப்பட்டு,
கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை உப்பிலிபாளையம் சிக்னல் அருகே பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்ய இந்த ரோபோ இயந்திரம் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது. இதனிடையே பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் ரூ. 2.12 கோடியில் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றுவதற்காக 5 நவீன ரோபோக்கள் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டன.

தற்போது இந்த ரோபோக்கள் அனைத்தும் தங்களது பணிகளை துவங்கி சிறப்பாக செய்து வருகின்றன. இதனிடையே கூடுதலாக தேவைக்கு ஏற்ப ரோபோக்களை வாங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “பாதாள சாக்கடை அடைப்புகளை எதிர்பார்த்த அளவு ரோபோக்கள் சுத்தம் செய்து வருகின்றன. மேலும் மழை காலங்களில் இந்த ரோபோக்களால் மிகவும் எளிதாக சாக்கடைகளை சுத்தம் செய்ய முடிகிறது. எனவே கூடுதலாக தேவைக்கு ஏற்ப ரோபோக்களை வாங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது” என்றார்.