கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபடுவதை தடுக்க கமிட்டி

– டீன் தகவல்

வேலூர் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி ராகிங் செய்ததாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பிற அரசு மருத்துவக்கல்லூரியில் ராகிங் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் ராகிங்கில் ஈடுபடுவதை தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இக்கல்லூரியில் ராகிங் என்ற பெயரில் மாணவர்கள் அத்துமீறுவதை தடுக்கும் வகையில், ஆஸ்பத்திரியின் டீன் தலைமையில், பேராசிரியர்கள், போலீசார் உள்ளிட்ட 7 பேர் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது:-
கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனி விடுதி கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

இதில் ஆண்கள் 200 பேர், பெண்கள் விடுதியில் 270 பேர் என 470 பேர் தங்கி படித்து வருகின்றனர். இவர்களுக்கு ராகிங் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜூனியர் மாணவர்களிடம் வரம்பு மீறி செயல்படக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவிர, ராகிங் தடுக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. விடுதி மற்றும் கல்லூரியில் ராகிங் தொடர்பான புகார்களை மாணவர்கள் அளிக்க புகார்பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், ராகிங் கமிட்டியில் உள்ள நபர்களின் மொபைல் எண்கள் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், ஜூனியர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், ராகிங் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கவும் விடுதியில் உதவி பேராசிரியர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நடந்து முடிந்துள்ள மருத்துவ மாணவர்கள் கவுன்சிலிங்கை அடுத்து வரும் 15-ந் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படுகிறது.

தற்போது வரை முதலாமாண்டில் 177 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். இதில், பலர் விடுதியில் தங்கி படிக்கவுள்ளனர். இந்த மாணவர்களுக்கும் ராகிங் தொடர்பான விழிப்புணர்வு அளிக்கப்படும் என்றார்.