கோவை கங்கா மருத்துவமனையில் மனிதவள மாநாடு

தென் மண்டல ஹெல்த்கேர் நிறுவனங்களின் கூட்டமைப்பு ‘மனிதவள மாநாடு – சவால்கள் மற்றும் வாய்ப்புகள்’ என்ற கருத்தரங்கை கங்கா மருத்துவமனையில் நடத்தியது.

இந்த கருத்தரங்கை ஹெல்த்கேர் நிறுவனங்களின் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவரும், கங்கா மருத்துவமனை இயக்குனருமான ரமா ராஜேசேகரன் துவக்கி வைத்து பேசுகையில், சுகாதார நிறுவனங்களைப் பொறுத்தவரை அதன் மனித வளங்கள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை அல்லது அது புறக்கணிக்கப்படுகிறது. மனிதவள மேலாண்மை குறித்த சமீபத்திய போக்குகளைப் புதுப்பித்தல் மற்றும் அவற்றை உள்வாங்குதல் ஆகியவை இந்தத் துறைக்கு தேவைப்படுகிறது என்று பேசினார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த கூட்டமைப்பானது பல்வேறு சுகாதார வசதிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மனித வள மேலாண்மையின் தற்போதைய செயல்பாட்டில் உள்ள இடைவெளிகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனங்களுக்குத் தெரியப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

NABH-HRM தரநிலைகள் குறித்து பிரதிநிதிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், சமீபத்திய வழிகாட்டுதல்கள் மற்றும் ஊதியம் குறித்த குறியீட்டின்படி சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதையும் இந்த கூட்டமைப்பு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் சிஎம்சி பொது கண்காணிப்பாளரும், இந்த கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான டாக்டர் லல்லு ஜோசப் தலைமை தாங்கினார்.

முன்னாள் அமைச்சரும் மாபாய் நிறுவன ஆலோசகருமான பாண்டியராஜன், ‘வேலையின் எதிர்காலம் – மனித வளத்தில் புதிய முன்னுதாரணம்’ என்ற தலைப்பில் பேசினார்.

இக்கருத்தரங்கில் ராஜகிரி மருத்துவமனையின் செயல் இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜான்சன் வாழப்பிள்ளை சிறப்புரையாற்றினார்.

புகழ்பெற்ற பேச்சாளர் சிவக்குமார் பழனியப்பனின் சுகாதாரப் பராமரிப்பில் பணியாளர் ஈடுபாடு மற்றும் தக்கவைப்பு பற்றிய முழுமையான உரையுடன் இக்கருத்தரங்கு துவங்கியது.

மேலும் இக்கருத்தரங்கில் மனிதவளத் துறை நிபுணர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனைத் திறன் பற்றிய குழு விவாதம்
நடைபெற்றது.

நேரடி கலந்துரையாடலில் ஹெல்த் கேர் கம்யூனிகேஷன், சீர்ப்படுத்தல் மற்றும் ஒழுங்குமுறை மற்றும் சிறந்த செயல்திறனுக்கான பயிற்சி போன்ற தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது.