ஆன்லைனில் பணத்தை இழந்த முதியவர் துரிதமாக மீட்ட கோவை போலீசார்

கோவை மாவட்டம் துடியலூர் இடிகரை பகுதியில் குமரவேல் (55) என்பவர் வசித்து வருகிறார். அவரது கைபேசிக்கு எண்ணிற்கு கடந்த மாதம் 20ஆம் தேதி அவருடையை ஆன்லைன் பேங்கிங் செயலி முடக்கப்பட்டுள்ளதாகவும், அதனை புதுப்பிப்பதற்கு வங்கி சம்பந்தமான விபரங்களை அனுப்புமாறும் குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனை உண்மை என்று நம்பிய அவர் தன்னுடைய வங்கி விபரங்களை பதிவு செய்து அனுப்பியுள்ளார். அனுப்பிய சிறிது நேரத்திலேயே அவர் வங்கி கணக்கிலிருந்து ரூ.2 லட்சம் பணம் திருடப்பட்டது.

இது சம்மந்தமாக முதியவர் உடனடியாக ஆன்லைன் பண மோசடி புகார் எண் 1930 தொடர்பு கொண்டு தன்னுடைய பணத்தை மீட்டுக் கொடுக்குமாறு புகார் தெரிவித்துள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில் பணத்தை இழந்த முதியவருக்கு விரைந்து மீட்டுக் கொடுக்கும் பொருட்டு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், உத்தரவின் பேரில், சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலான சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு ரூ.1,81,000 பணத்தை மீட்டு அவருடைய வங்கிக் கணக்கிற்கு திரும்ப பெற்றுக் கொடுத்தனர்.

துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்டதற்கான ஆவண சான்றிதழை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாதிக்கப்பட்டவரிடம் வழங்கினார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு, ஆன்லைனில் குறைந்த பணத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என செயலிகளில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், இணையதளத்தில் உங்களது பணத்தை இழந்து விட்டால் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்றும், சைபர் கிரைம் புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யதால் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் உங்களை தொடர்பு கொண்டு நீங்கள் இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.