“தூய்மை பணியின் போது ஏற்படும் மரணங்கள் தடுக்கப்பட வேண்டும்”

தூய்மை பணியின்போது ஏற்படும் தொழிலாளர்களின் மரணங்கள் நாடு முழுவதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என இந்து சமுதாய நல்லிணக்க அமைப்பின் அகில இந்திய அமைப்பாளர் ஷியாம் பிரசாத் தெரிவித்துள்ளார்.

கோவையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது அவர் கூறியதாவது:

அனைத்து சாதியினரையும் ஒருங்கிணைத்து அனைவரும் சமம் என்ற நிலையை எட்ட எங்களது அமைப்பு பாடுபட்டு வருகிறது. சாதி பாகுபாட்டை போக்க ஸ்ரீராமானுஜச்சாரியார், சுவாமி விவேகானந்தர், நாராயணகுரு மகரிஷி, தயானந்த சரசுவதி உள்பட பலரும் பாடுபட்டனர்.

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையில் 36 சாதி தலைவர்கள் இணைந்து இந்து புதை குழியை மேம்படுத்தும் பணியில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். குடிசை பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்கிறோம்.

கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை இந்தியாவில் தூய்மை பணியின்போது இறந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 989 ஆக உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 218 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. நாடு முழுவதும் இந்த மரணங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

இந்த அமைப்பின் தமிழக அமைப்பாளர் ராஜமுருகானந்தம், கோவை மண்டல அமைப்பாளர் சிவலிங்கம், கோவை நகர அமைப்பாளர் வழக்கறிஞருமான திருலோக சந்தர் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது  உடன் இருந்தனர்.