உங்கள் வீட்டில் செல்லப்பிராணி உள்ளதா? 

செல்லப் பிராணிகள் வளர்ப்பு என்பது தற்போது பலருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. வீட்டில் உள்ள செல்லப் பிராணிகள் செய்யும் சில சுவாரசியமான செயல்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளுவது ட்ரெண்டாகி வருகிறது. அதிலும் வளைகாப்பு, பிறந்தநாள் கொண்டாட்டம் என மனிதர்களுக்கு நடத்துவதே போன்றே அவைகளுக்கும் அதன் உரிமையாளர்கள் முன்னுரிமை அளித்து கொண்டாடுகின்றனர். இதுபோன்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில் உலா வருவதை காணமுடியும்.

பெரும்பாலும் நம் வீடுகளில் நாய், பூனை, பறவை போன்ற உயிரினங்களை செல்ல பிராணிகளாக வளர்க்கிறோம். வெளிநாடுகளில் பாம்பு, புலி போன்ற உயிரினங்களை கூட செல்லப் பிராணிகளாக வீட்டில் வளர்க்கின்றனர். செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களில் மனிதர்களை விட விலங்குகளே மேல் என்ற எண்ணம் கொண்டவர்களும் உண்டு. அன்பினால் செய்யும் செயலுக்கு ஈடு இணை இல்லை தான். ஆனாலும் வளர்ப்பு பிராணிகள் வீட்டில் இருக்கும் போது சற்று கவனமாகவே இருக்க வேண்டும்

வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு ரோமங்கள் உதிரும் தன்மை கொண்டிருந்தால் நாம் சாப்பிடும் உணவிலும் அவை பறந்து வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு இதனால் ஒருவிதமான ஒவ்வாமை மற்றும் அலர்ஜி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

செல்லப் பிராணிகள் அன்பில் மட்டுமல்ல, அவைகளுக்கே தெரியாமல் சில தொற்று நோய்களையும் பரப்புகின்றன. மனிதர்களைப் போலவே விலங்குகள் மற்றும் பறவைகளும் கூட சில பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளை பரப்புகின்றன. நாக்கால் நக்குதல், கடித்தல், உமிழ்நீர் மற்றும் பொடுகு போன்றவை மூலம் தொற்றுகள் பரவி மனிதர்களை நோய்வாய்பட செய்கிறது.

பூனைகளிடம் டாக்ஸோபிளாஸ்மோசிஸ் கோண்டி என்ற ஒட்டுண்ணி காணப்படுகிறது. இந்த ஒட்டுண்ணியால் டாக்ஸோபிளாஸ்மோசிஸ் தொற்று பரவுகிறது. பூனைகள் பொதுவாக எலிகளை உண்ணக் கூடியவை என்பது நாம் அறிந்ததே. இந்த எலிகள் பெரும்பாலும் ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இவை பூனைகளுக்கும் பரவுகின்றன. எனவே பூனைகளிடம் இருந்து மனிதர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். எனவே வளர்ப்பு பூனைகள் வெளியே குப்பைகளிலோ அல்லது அழுக்கான பாத்திரங்களிலோ அல்லது வேக வைக்காத உணவுகளையோ உண்ணாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மண் மற்றும் மணலில் பூனைகள், நாய்கள் விளையாடுவதால் அவைகளிடம் பல ஒட்டுண்ணிகள் தொற்றிக் கொள்கின்றன. செல்லப் பிராணிகள் தொற்றுள்ள உண்ணிகளை உண்ணும்போது நாடாப் புழுக்கள் பரவுகின்றன. இந்த தொற்று மிகவும் லேசானதாக இருந்தாலும், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளிடையே பரவாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

கிளிகள் மூலம் கிளி காய்ச்சல் அல்லது பிசிட்டகோசிஸ் பாதிப்பு ஏற்படுகிறது. கிளமிடோபிலா என்ற பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட கிளிகள் மூலம் மனிதர்களுக்கும் தொற்றுகள் பரவுகின்றன. தொற்றால் பாதிக்கப்பட்ட கிளிகளிடம் இருந்து வெளிவரும் உலர்ந்த சுரப்புகளை சுவாசிப்பதன் மூலம் மனிதர்களுக்கும் பரவுகிறது. இந்த கிளி காய்ச்சலால் குளிர், உடல் வலி மற்றும் இருமல் போன்ற பிரச்சினைகள் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன. எனவே தினசரி பறவை கூடுகளை சுத்தம் செய்வது அவசியம். கூட்டை பேப்பர் அல்லது துணிகளை கொண்டு சுத்தம் செய்து சுகாதாரத்தை மேம்படுத்துவது தொற்றில் இருந்து பாதுகாக்கும்.

ரேபிஸ் அல்லது வெறிநாய்க் கடி என்று சொல்லக் கூடிய இந்த நோய் உயிரையே கொள்ளக் கூடிய மோசமான வியாதிகளில் ஒன்று. பாதிக்கப்பட்ட விலங்கிடம் இருந்து கடிபட்ட நாயின் உமிழ்நீர் மனிதர்கள் மீது படும்போது தொற்று பரவிவிடும். சரியான நேரத்தில் முறையான சிகிச்சை எடுக்கவிட்டால் நாய் மற்றும் மனிதர் இருவருக்கும் அபாயகரமானதாக மாறிவிடும். உடனே தடுப்பூசி செலுத்துவது அவசியம். காய்ச்சல் அல்லது காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பின் உயிர் பிழைப்பது கடினம். எனவே ஆண்டுதோறும் செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது அவசியம்.

வீட்டில் நாய்கள் வளர்க்கப்பட்டாலோ அல்லது எலிகள் இருந்தாலோ கவனத்துடன் இருப்பது அவசியம். ஏன் என்றால் இதன் மூலம் லெப்டோஸ்பிரோசிஸ் என்ற தொற்று சிறுநீர் மூலம் பரவும். சிறுநீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் நீர் மற்றும் மண்ணில் பல மாதங்கள் வாழக் கூடியவை. உங்கள் செல்ல நாய் அதன் மீது ஓடி குதித்து விளையாடும் போது உங்களுக்கே தெரியாமல் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம். இந்த தொற்று காய்ச்சல் மற்றும் வாந்தியில் ஆரம்பித்து உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் சிறுநீரக செயலிழப்பு வரை கொண்டு சென்று விடும்.

எனவே செல்ல பிராணிகளை நேசிக்கும் அளவிற்கு அதன் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை பேணி காப்பது மிக முக்கியம். அது நம்மையும், சுற்றியுள்ளவர்களையும் நலனை காப்பதோடு, உங்கள் வளர்ப்பு பிராணிகளுக்கும் இது நன்மை பயக்கும்.