ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் மீதான வழக்குகள் ரத்து

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது இருந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

மகாபலிபுரத்தில் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடுகள் கடந்த 2012- 2013 ம் ஆண்டில் நடைபெற்றது. அங்கு நடைபெற்ற மாநாட்டின்போது, பொது அமைதிக்கு இடையூர் ஏற்படுத்தும் வகையில் இரவு 10 மணிக்கு மேல் கூட்டம் நடத்தியதாக, பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவருமான அன்புமணி ராமதாஸ், அப்போதைய தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோர் மீது மகாபலிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

அதனைத்தொடர்ந்து, இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்குகள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

அப்போது, இந்த வழக்கில் பாமக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்குகள் அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்குகள் என்றும், வழக்குகள் தொடர உரிய சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என கூறினார்.

இது தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது தொடரப்பட் வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.