“ஊஞ்சல் ”,“தேன் சிட்டு”, “கனவு ஆசிரியர்” இதழ்களை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை

மாணவர்களின் வாசிப்புத்திறன் ஊக்குவித்து, அவர்களின் படைப்பு திறன்களை வெளிப்படுத்தும் வகையில், “ஊஞ்சல் இதழ்”,“தேன் சிட்டு இதழ்” மற்றும் “கனவு ஆசிரியர்” இதழ்கள் வெளியிடப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டார்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாதம் இருமுறை தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு “ஊஞ்சல் இதழ்”, உயர்வகுப்பு மாணவர்களுக்கு “தேன் சிட்டு” இதழ், ஆசிரியர்களுக்கான படைப்புத் தளத்தை உருவாக்க மாதந்தோறும் “கனவு ஆசிரியர்” இதழ்கள் வெளிவரவுள்ளன. சுமார் ரூ.7 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று 2022-2023 ம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார்.

பள்ளி மாணவர்களுக்கான ஊஞ்சல் சிட்டு இதழ் தேன் சிட்டு இதழ் மற்றும் ஆசிரியர்களுக்கான கனவு ஆசிரியர் இதழ் போன்ற இதழ்களில் தேசிய, மாநில செய்திகள் மட்டுமல்லாமல் மாவட்டச் செய்திகளும் மாவட்டத்திலுள்ள மாணவர்களின் படைப்பாற்றல்கள் இடம் பெற வேண்டும்.

இந்த இதழ்களை வகுப்பறைச் சூழலுடன் இணைத்து வாசிப்பை பேரியக்கமாக மாற்றும் வண்ணம் பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவிலானா கதை, கட்டுரை, கவிதை, ஓவியம், பேச்சு உள்ளிட்ட பல்வேறு படைப்புத் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகளும் மாணவர்களை ஊக்குவிக்கப் பயிற்சிப் பட்டறைகளும் வல்லுநர்கள் மூலமாக நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.