“பாஸ்” இருந்தால் மட்டுமே அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அனுமதி

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும்  23ம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை எப்படி நடத்துவது? என்னென்ன தீர்மானங்களைக் கொண்டுவரலாம்? என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிப்பதற்காக அதிமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு  முன்பு  நடைபெற்றது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற அந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு, அவர்களின் புகைப்படம் அடங்கிய பாஸ் ஒன்று, அக்கட்சியின் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே பொதுக்குழுவில் கலந்துக்கொள்ள முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவை கைப்பற்றும் முயற்சிகளில் சசிகலா தீவிரம் காட்டி வரும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்டத்தில் நுழைவதை தடுக்கும் வகையில் அதிமுக தலைமை இதுபோன்ற  நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஆனால், தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், அதிருப்தியாளர்களை தடுத்து நிறுத்துவதற்கு ஏதுவாக இந்த பாஸ் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.