மூளைச்சாவடைந்த பெண்ணால் 6 பேருக்கு மறுவாழ்வு

சாலை விபத்தில் மூளைச் சாவடைந்த 52 வயது பெண்மணியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் ஆறு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், மோடமங்கலம் கிராமம், மேல்பாறை காடு பகுதியில் வசிக்கும் பெருமாள் என்பவரின் மனைவி ஜெயமணி. இவருக்கு 52 வயது. இவரது மகள் மல்லிகா கோவை நீலாம்பூரில் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு வந்த ஜெயமணி, ஜூன் 8 ஆம் தேதி அவரது மகன் பூபதியுடன் இருசக்கர வாகனத்தில் சின்னியம்பாளையம் சென்றபொழுது ஹோட்டல் லீ மெரிடியன் அருகில் மாலை 6.45 மணிக்கு திரும்பும்பொழுது பின்னே வந்த நான்குசக்கர வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

உடனடியாக அவர் சிகிச்சைக்காக அவிநாசி ரோடு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜெயமணியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது கணவர் பெருமாள் மற்றும் மகன், மகள்கள் முன் வந்தனர். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், மற்றும் தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டது. ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம், கண்கள் மற்றும் தோல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல. ஜி. பழனிச்சாமி கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர் உடல் உறுப்பு தானம் வழங்கிய ஜெயமணி குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.