தமிழ்நாட்டிற்கு மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் – அமைச்சர் பொன்முடி

தமிழ்நாட்டில் மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்றும், புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த தேவை இல்லை என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள நிலையில், சேர்க்கையை அதிகரிக்க இந்தாண்டு 13 பாலிடெக்னிக்கில் 10 புதிய பாட திட்டங்கள் அறிமுகபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜூலை 1ஆம் தேதி முதல் பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு வகுப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நேரடியாக 2ம் ஆண்டு பாலிடெக்னிக் வகுப்புகளில் சேர்வதற்கான அட்டவணை இன்று வெளியிடப்படும். பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும். புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த தேவை இல்லை. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வந்தால் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படாது.

பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை எனக் கூறிய அவர், பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்றும், கட்டணம் குறித்த AICTE பரிந்துரையை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை என்றும் தெரிவித்தார்.