அகில இந்திய கூடைப்பந்து போட்டி துவக்கம்

கோவையில் மே 29 முதல் ஜூன் 3 வரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் நடைபெறுகிறது.

கோவை வ உ சி. பூங்கா மாநகராட்சி விளையாட்டு அரங்கத்தில், மே 29ம் தேதி மாலை 6 மணிக்கு அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் ஆரம்பிக்க உள்ளது. கடந்த 54 ஆண்டுகளாக ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி மற்றும் 18 ஆண்டுகளாக பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இப்போட்டிகளை துவக்கி வைக்க  சிறப்பு விருந்தினர்களாக கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் துணை மேயர் வெற்றி செல்வன் கலந்துகொள்ள இருக்கின்றனர்.  மேலும், ஆர்த்தோ ஒன் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர். டேவிட் வி.ராஜன், சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் இணை நிர்வாக இயக்குனரும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவரான  செல்வராஜ் முன்னிலை வகிக்கின்றனர்.

இதுக்குறித்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் செல்வராஜ் கூறியதாவது, ஆண்கள் பிரிவில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள  அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  இதில் ஆண்கள் பிரிவில் 9 அணிகளும், பெண்கள் பிரிவில் 8 அணிகளும் பங்கேற்கின்றனர்.

இப்போட்டிகள் மே 29ல் தொடங்கி, ஜூன் 1 வரை சூழல் முறையிலும், பின்பு ஒவ்வொரு முறையும்  2 இடங்கள் பெறும் அணிகள் அரையிறுதிக்கும் தகுதி பெறும். இதில் வெற்றி பெறும் அணிகள் ஜூன் 3ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் விளையாடுவார்கள்.

இதில், ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு 1 லட்சம், 2 ம் பரிசு 50 ஆயிரம், 3ம் பரிசு 20 ஆயிரம் மற்றும்  4ம் பரிசு 15 ஆயிரம் வழக்கப்படும். மேலும் தேர்வு செய்யப்பட்ட அணிக்கு ரேணுகா ராமநாதன் நன்நடத்தை  நினைவு விருதும் வழங்கப்படும்.

மேலும், பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு 50 ஆயிரம், இரண்டாம் பரிசு 25 ஆயிரம், மூன்றாம் பரிசு 15 ஆயிரம் மற்றும் நான்காம் பரிசு பத்தாயிரமும், சிறப்பாக விளையாடும் வீராங்கனைக்கு சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற விருதும் வழங்கப்படும்.

ஜூன் 3ம் தேதி மாலை 8 மணிக்கு வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் தலைமையில் பரிசுகள் வழங்கப்படும் என அவர் கூறினார்.