கொடிசியாவில் ஜீன் 2 முதல் 6 வரை தொழில் கண்காட்சி

கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் ஜீன் 2 முதல் 6 வரை 19 வது சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி நடைபெறயுள்ளதாக கொடீசியா அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை கொடீசியா அலுவலகத்தில், கொடீசியாவின் தலைவர் ரமேஷ் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் ஜீன் 2 முதல் 6 வரை 19 வது சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி நடைபெற இருப்பதாகவும்,
இக்கண்காட்சியில் இந்தியா, தைவான், சீனா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

இக்கண்காட்சியில் 406 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் 50,000 வர்த்தக பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த கண்காட்சியின் மூலம் 800 கோடி அளவில் வணிகம் நடக்கும் என எதிர்பார்ப்பதாக கூறிய அவர், இந்தியா முழுவதும் உள்ள தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் வருகை தர உள்ளனர் எனக் கூறினார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சகத்தின் சார்பில் மானியத்துடன் சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. மேலும், இந்நிறுவனங்கள் எளிதில் நிதி உதவி பெறும் வகையில் NSIC மற்றும் SIDBI நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது என்றார்.