சந்தைக்கு தக்காளி வரத்து உயர்வு…விலை குறைவு!

கோடைமழையின் காரணமாக, கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தக்காளி விலை தற்போது சற்று குறைந்திருக்கிறது.

தமிழகத்தில், கோடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதாலும், சென்னைக்கு வரக்கூடிய வரத்து குறைந்ததாலும், தக்காளி விலை அதிகரித்திருந்தது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், ஒரு கிலோ தக்காளி ரூ. 110 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று சென்னைக்கு வரக்கூடிய தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்திருப்பதாலும், தக்காளி விலை குறைந்து வருகிறது. இதன் அடிப்படையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று ரூ. 90 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி விலை கிலோவுக்கு ரூ. 35 குறைந்து, தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ. 55 முதல் ரூ. 60 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், சென்னையில் பிற இடங்களில் சில்லறை விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ. 65 முதல் ரூ. 70 வரை விற்பனை செய்யப்படுகிறது. அரசு சார்பில் கூட்டுறவு பண்ணை பசுமை அங்காடியில் ரூ. 63 க்கு விற்பனையாகிறது. இனி வருகிற நாட்களில் தக்காளியின் விலை மேலும் குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தக்காளி மட்டுமில்லாமல், பல காய்கறிகளின் விலையும் 5 முதல் 10 ரூபாய் வரை குறைந்திருப்பதாகவும் காய்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.