கோவையில் வாகன நிறுத்தத்திற்கு அதிக கட்டணம் வசூல்: 21 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தை அறிவித்த அண்ணாமலை!

கோவை மாநகராட்சியில் வாகன நிறுத்தத்திற்கு அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து வருகிற 21 ஆம் தேதி பாஜக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

செல்வபுரம் தொகுதியில் பாஜக சார்பில் “நம்ம ஊரு மோடி பொங்கல் விழா” எனும் தலைப்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இங்கு 108 பொங்கல் பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். மேலும் உரியடித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் பேசுகையில்: பாஜக இளைய தலைமுறைக்கு நம் கலாச்சாரத்தை எடுத்து செல்லும் வகையில் பொங்கல் விழாவை நடத்தி வருகிறோம். பிரதமரும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளதாக கூறினார்.

வேலுநாச்சியார் மற்றும் சிதம்பரனார் தேசிய தலைவர்கள் இல்லை என்பது மத்திய அரசின் கருத்து அல்ல. குடியரசு தின விழாவில் தமிழக அரசின் ஊர்தி அனுமதிக்காததற்கு பாதுகாப்புத் துறை உரிய விளக்கம் அளிக்கும். கேரள மாநில ஊர்தியில் ஆதிசங்கரர் படம் இடம்பெறக்கூடாது என கேரள அரசு அறிவித்துள்ளதால் நாராயணகுருவின் படமும் இடம் பெறவில்லை. நேரம் கருதி அனைத்து மாநில அரசுகளின் ஊர்திகளும் பங்கேற்க முடியாது எனக் கூறுனார்.

தனியார் தொலைக்காட்சியில் வெளியான நகைச்சுவை நிகழ்ச்சி கருத்து சுதந்திரம் அல்ல என தெரிவித்த அவர் குழந்தைகளை பாதுகாக்கும் என்.சி.பி.சி.ஆர் அமைப்பின் விதிமுறைகளுக்கு அது எதிரானது எனவும், வஞ்சகமான முறையில் இக்கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை சட்ட ரீதியாக அணுகுவதாகவும் அவர் தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் வழங்க முடியாது என்ற நிலைப்பாடும், சாதி அரசியல் செய்யக்கூடாது என்ற நிலைப்பாடுகளால் பலர் விலகி சென்றுள்ளதாகவும், நிச்சயம் பாஜக உபி தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் காவல்துறை இயக்குனர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதன் மூலம், பிரதமரின் பயணத்தின் போது பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது எனவும், உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் முழுமையான தகவல்கள் வெளியாகும் எனவும் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியில் 30 சாலைகளில் வாகன நிறுத்தம் செய்ய கட்டணம் என்பது ஏற்புடையது அல்ல, இதனை கண்டித்து வருகிற 21ம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளதாகவும், அதற்கு முன்பாக மாநகராட்சி நிர்வாகம் இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் இல்லையேல் மக்கள் தேர்தலில் இதற்கு பதிலடி கொடுப்பார்கள் என தெரிவித்தார்.

பாஜக – அதிமுக கூட்டணி சிறப்பாக உள்ளது எனவு திமுக காங்கிரஸ் கூட்டணியில் தான் குழப்பம் உள்ளது எனவும் கூறிய அவர், தமிழக காங்கிரஸ் கட்சியின் கூடாரம் காலியாகியுள்ளதாகவும் பாஜக கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை எனவும் தெரிவித்தார்.

கார்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தன்னை அவதூறாக பேசுவதோடு மேகதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் எனவும் பேசுகிறார் ஆனால் இதுவரை திமுக இது குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என கூறினார். மேகதாதுவில் அணை கூடாது என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது எனவும் தமிழக அரசின் உரிமைகளை மீட்டெடுக்காவிட்டால் காவிரி, முல்லை பெரியாறு அணைகளின் உரிமைகள் பறிபோகும் எனவும் தெரிவித்தார்.