“மாஸ்க் போடாம வெளில வரக்கூடாது” : சாலையில் இறங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய முதலமைச்சர்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் ஏன் முகக்கவசம் அணியவில்லை எனக் கேட்டு, முகக்கவசங்களை வழங்கி அவர்களுக்கு அறிவுரை கூறினார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது. உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
கொரோனா பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது. ஒமைக்ரானை தடுப்பதற்கான கேடயம் முகக்கவசம் மட்டும்தான் என்று கூறிவரும் முதலமைச்சர் அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியம் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்.
நோய் பரவலில் இருந்து நம்மைக்காக்கும் ஒரே ஆயுதம் முகக்கவசம் மட்டும்தான். எனவே மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று சென்னை அண்ணாசாலையில் வாகனத்தில் வந்துகொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திடீரென வாகனத்தை நிறுத்தி இறங்கி, சாலையில் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுகிறார்களா என ஆய்வு செய்தார்.
கடைப் பகுதியில் நடந்து சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் ஏன் முகக்கவசம் அணியவில்லை எனக் கேட்டு, முகக்கவசங்களை வழங்கி அவர்களுக்கு அறிவுரை கூறினார்.