வ.உ.சிதம்பரனார் நினைவு தினம்: அமைச்சர் செந்தில் பாலாஜி மாலை அணிவித்து மரியாதை

வ.உ.சிதம்பரனாரின் 85வது நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மத்திய சிறையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மரியாதை செலுத்தினார்.

கோவை மத்திய சிறைச்சாலையில் தகுந்த கட்டுப்பாடுகளுடன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. செக்கிழுத்த செம்மல் என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரனாரின் 85 வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மத்திய சிறையில் சிதம்பரனாரின் நினைவாக வைக்கப்பட்டுள்ள அவர் இழுத்த செக்கிற்கு பலதரப்பட்ட மக்கள் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் ஆண்டு தோறும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சிதம்பரனாரின் திருவுருவ சிலை, மற்றும் செக்குகிற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் உடனிருந்தனர்.